முதலிய கொடியவர்பலரை அழித்து நல்லோர்களைக்காத்திடுதலாலும், அது யமனுக்கு உறவாதல் - அவனது கொலைத்தொழிலைத்தான் மேற்பூண்டு நடத்துதலாலு மென்க. அளவிறந்த பேய்கள் வந்து ஆடுதல், தமக்கு மிக்க தசையுணவு கிடைத்ததனாலாகியகளிப்பின் மிகுதியாலாகும். மறல்-கொடுமை:அதையுடையவன், மறலி. இதுமுதற் பதினான்குகவிகள்- பெரும்பாலும் முதல் நான்கு சீரும் மாங்காய்ச்சீர்களும், ஈற்றுச்சீரொன்று மாங்கனிச்சீருமாகிய நெடிலடி நான்குகொண்ட கலிநிலைத்துறைகள். (462) 126.-வீமனைக்காணாதுதருமபுத்திரன் திரௌபதியை வினாவல். இவ்வாறிவன்செய்கையிவன்வந்த தறியாமலெழில்கூர்வனத்து அவ்வாறுபயில்கின்றவருள்வாரி தானுற்றவதுகூறுவாம் கைவார்கதைக்காளையைக்கண்ணுறச்சூழல்காணாதுமுன் செவ்வாய்மடப்பாவைநின்றாளைநீகூறெனச்செப்பினான். |
(இ - ள்.)இவன் செய்கை-இவ்வீமனது செய்தி, இ ஆறு-இவ்விதமாம்; எழில் கூர் வனத்து - அழகுமிக்க காட்டிலே, அ ஆறு பயில்கின்ற - அவ்விதமாகப் பொருந்தி வசிக்கிற, அருள் வாரி - கருணைக்கடலான தருமபுத்திரன், இவன் வந்தது அறியாமல் - இவ்வீமன் (இங்ஙனம் இங்கு) வந்ததையுணராமல், உற்ற அது-அடைந்த அக்கவலையை,கூறுவாம்- சொல்லத் தொடங்குவோம்:கை வார் கதை காளையை- கையில் நீண்ட கதாயுதத்தையுடைய இளவீரனானவீமனை,சூழல் - (தாம்) வசிக்குமிடத்திலே, கண்உற காணாது- கண்களிற்படும்படி காணாமல், (தருமபுத்திரன்), முன் செம் வாய் மடம் பாவை நின்றாளை- எதிரில்நின்ற சிவந்த வாயையுடைய இளையசித்திரப்பதுமைபோலழகிய திரௌபதியை (நோக்கி), நீ கூறு என செப்பினான்-(வீமன்சென்றஇடத்தை) நீ சொல்வாயென்று வினவினான்;(எ-று.) எழில்கூர்வனம்என்றது, இங்கே காந்தர்ப்பமலையைச்சார்ந்த காட்டை. அவ்வாறு என்ற சுட்டு, கீழ்ப் பதினோராங்கவியில் "அம்முனிவன்மொழிப்படியே வரம்பில் கேள்வி யறன்மகனுந் தம்பியருமரிவையோடு, மெம்முகமுந் தம்முகமா விலையுங்காயு மினியகனியுடனருந்தி யிருக்கு நாளில்"என்றதைச் சுட்டும். வாரி- வடசொல்:கடலுக்கு ஆகுபெயர். மடம் - ஒரு பெண்மைக்குணமாகவுமாம்; இது-மற்றைப் பெண்குணங்களுக்கும் உபலக்ஷணம். (463) 127.-திரௌபதிநிகழ்ந்தன உரைத்தல். வானின்றுமலரொன்றுதன்முன்பு மின்போலவந்துற்றதும் தானின்றிம்மலர்போலமலர்தேடி நீயின்றுதருகென்றதும் தேனின்றதொடையானுமளகேச னகர்மீதுதனிசென்றதும் கானின்றகுழலாளுமன்னற்கு முன்கட்டுரைத்தாளரோ. |
|