பக்கம் எண் :

300பாரதம்ஆரணிய பருவம்

நறுமணத்தையுடையதொருபூவைக் கொணர்தற்பொருட்டு, சென்றான்-
(அளகாபுரிக்குப்) போய்விட்டான்,'என-என்று கூறி,-சிந்தை நொந்து -
மனம் வருந்தி, அன்புடன் - பிரீதியுடனே, பின்னும் - மீண்டும், இவை
செப்புவான் - இவ்வார்த்தைகளைச்சொல்பவனானான்;,(எ-று.)-அவற்றை
மேற்கவியிற் கூறுகிறார்.

     செம்பட்டமயிருக்கு மின்தாரையையும், வெள்ளெயிற்றுக்கு
வெண்ணிலாவையும், கரிய பெரிய வடிவத்துக்குக் காளமேகத்தையும் உவமை
கூறினார்.நீதிக்கு ஓர்வடிவாம் நிருபன் - நீதி தவறாதஅரசனென்றபடி;கீழ்
"தருமத்தினுருவாகி"என்பதற்குங் கருத்து இவ்வாறே.  தனக்கு
இரண்டுகைகள் போன்ற வீமஅருச்சுனர் இருவரையும் பிரிந்ததனாலாகிய
எளிமைதோன்ற, 'தமியேன்'என்றான். உயவாமல், உயவு - பகுதி: இது
உசாவு என்பதன் மரூஉ.  வடியா நிருபன் என்றும், உரையாமலென்றும்
பாடம்.                                                 (467)

131.-வீமனுக்குஇடையூறு நேரும்முன் அங்ஙன்
நேராதிருக்க நாம்அளகை செல்வோமென்று தருமன்
அவன் தேரிலேறுதல்.

எம்பிக்கொரிடையூறுவந்தெய்து முன்யாமியக்கேசனூர்
வம்புற்றமலர்வாவிசென்றெய்தி விரைவோடுவருவோமெனா
வெம்புற்றபைங்கானினிடை மின்னுமிளையோருமுடன்மேவவே
கம்பிக்குநெஞ்சோடவன்றேரின் மீதக்கணத்தேறினான்.

     (இ-ள்.)'எம்பிக்கு- எனது தம்பியான வீமனுக்கு, ஒர் இடையூறுவந்து
எய்தும்முன் - யாதாயினுமொரு தீங்கு நேர்தற்கு முன்னமே,-
(நேராதிருக்கும்படி), யாம்-நாம், இயக்கேசன் ஊர் -யக்ஷராஜனான
குபேரனது அளகாநகரத்திலுள்ள, வம்பு உற்ற - பரிமளம் மிக்க, மலர் -
பூக்களையுடைய,வாவி - பொய்கையை, விரைவோடு சென்று எய்தி-
விரைவிற் போயடைந்து, வருவோம்-மீண்டுவருவோம்'எனா- என்று
(கடோற்கசனைநோக்கிக்) கூறி, வெம்பு உற்ற பைங்கானின் இடை - தாபம்
பொருந்தின பசுமையான அந்தக்காட்டில், மின்உம்-மின்னற்கொடிபோன்ற
திரௌபதியும், இளையோர்உம்- (தனது) தம்பிமாரான நகுலசகதேவர்
இருவரும், உடன் மேவ - பிரியாது வசிக்க, கம்பிக்கும் நெஞ்சோடு -
(வீமனைப்பற்றின கவலையால்)நடுங்குகின்ற மனத்துடனே, அவன் தேரின்
மீது-அந்தக் கடோற்கசனது இரதத்தின்மேல், அ கணத்து-அந்த
க்ஷணத்திலேயே, ஏறினான்- (தருமபுத்திரன்) ஏறினான்;(எ-று.)

     தருமன்அளகைக்குச் செல்லக் கடோற்கசனொடு
தேரின்மீதேறினனென்பதாம்.  மேல் 138-ஆங் கவியில் "அன்றந்த
விடம்விட்டிமைப்போதி லத்தேரின் மிசையேறியே, மின்றந்த
விடையாளுமிளையோருமுறைகானினிடை மேவினான்"என வருதலால்,
இச்செய்யுளின் மூன்றாமடிக்கு- திரௌபதியும் நகுலசகதேவரும்
அக்காட்டினின் தன்னுடன்வர எனப் பொருள் கூறலாகாது.       (468)