ஐந்தாவது மணிமான்வதைச்சருக்கம் மணிமான்என்பவனது வதத்தை யுணர்த்தும் பாக மென்று பொருள். மணிமான் - ஒருவித்தியாதரன்; குபேரனது சேனைத்தலைவர்களுள் ஒருவன். மணிமாந் என்னும் வடசொல்லுக்கு-இரத்தினங்களையுடையவ னென்று பொருள்; மாந் - வடமொழிப் பெயர்விகுதி. இந்தச்சருக்கத்திற் கடவுள்வாழ்த்துச்செய்யுள் காணப்படவில்லை; மாநசிகமாத்திரமாகக் கடவுள் வணக்கம்நிகழ்ந்ததென்றாவது, கடவுள்வாழ்த்தாக நூலாசிரியராற் பாடப்பட்டதொரு செய்யுள் பிற்காலத்தில் ஏடெழுதுவோரால் எழுதாதுவிடப்பட்டு எஞ்சிய தென்றாவதுகாரணங் காண்க. இங்ஙனமே மற்றையிடங்களிலும் கொள்க. 1.-ஒருநாள்ருஷிபத்தினிமாருடன் திரௌபதி நீர்ப்பெருக்கிற்படிதல். அங்கிவர மர்ந்துறையு நாளிலணி யோடும் பொங்கியொரு மாநதிபு துப்புனல்வ ரப்போய் மங்கைமுனி மங்கையர்க டங்களொடு வாசப் பங்கயநெ டுந்துறைந றும்புனல்ப டிந்தாள். |
(இ-ள்.) அங்கு- அவ்விடத்தில் [அஷ்டகோணமுனிவரதுவனத்திலே], இவர் - இந்தப்பாண்டவர்கள், அமர்ந்து - விரும்பி, உறையும் நாளில் - வசிக்குங்காலத்தில்,-(ஒருநாள்),-ஒருமா நதி-ஒருபெரியநதியிலே, புதுபுனல் - புதியநீர்வெள்ளம், அணியோடுஉம் பொங்கிவர - அழகுடனே பெருகி வருகையில், மங்கை - பெண்களிற்சிறந்த திரௌபதி, முனிமங்கையர்கள் தங்களொடு-ருஷிபத்தினிகள் பலருடனே, போய்-சென்று, வாசம் பங்கயம் நெடு துறை புனல் - வாசனையையுடையதாமரைமலரைக்கொண்ட பெரிய நீர்த்துறையையுடைய சிறந்த அந்நீரிலே, படிந்தாள் - நீராடினாள்; மங்கையென்றசொல், இங்குப் பருவங்குறியாமற் பெண்என்னு மாத்திரையாய் நின்றது; அப்பருவத்துக்கு வயதெல்லை,பன்னிரண்டுமுதற் பதின்மூன்றளவும். துறை - நீரிலிறங்குமிடம். இதுமுதற்பதின்மூன்று கவிகள் - சடாசுரன்வதைச்சருக்கத்தின் 21 - ஆங் கவிபோன்ற கலிவிருத்தங்கள். (503) 2.-அப்புனலில்அடித்துக்கொண்டுவந்த பதுமமலரைத் திரௌபதி எடுத்தல். அப்புனலிலார்தரு மணங்கமழவந்தண் மெய்ப்பதுமநாண்மலர் மிதந்துவரமீதே மைப்பதுமவாள்விழி மடந்தையதுகாணாக் கைப்பதுமநாண்மல ருறக்கடிதெடுத்தாள். |
|