பக்கம் எண் :

மணிமான்வதைச்சருக்கம்329

     (இ-ள்.) (அம்மலையில்),ஒரு சார் - ஒருபுறத்தில், மரகதம் மணி பணி
செய் மாளிகைகள் - மரகதரத்தினத்தால் தொழில்செய்யப்பட்ட வீடுகளும்,-
ஒருசார்-ஒருபக்கத்தில், அரி மணி அழுத்தியன ஆலயமது -
இந்திரநீலக்கற்களைப்பதித்துக்கட்டின வீடுகளும்,-ஒருசார்-ஒருபக்கத்தில்,
எரி மணி அழுத்தியன இல்லின் விதம் - நெருப்புப்போற் செந்நிறமாய்
விளங்குகிற பதுமராகமணிகளைப்பதித்தனவான வீடுகளின்வகைகளும்,-
ஒருசார் -ஒருபக்கத்தில், தருணம் மணி முத்தின் இயலும் சதனம்-(ஒளியிற்)
சிறப்பையுடைய நவரத்தினங்களுள் முத்துக்களா லமைந்த வீடுகளும்,
(உள்ளன);

     அரி - ஹரி;இந்திரன்;வடசொல்.  அரிமணி - இந்திரநீலம்.
தருணமணிமுத்தின் - சிறந்த மாணிக்கம் முத்து என்பவற்றால்என்று
உரைப்பாருமுளர்.  இளமையுணர்த்துந் தருணமென்னும் வடசொல், இங்கே
இலக்கணையாய்ச்சிறப்பு எனப்பட்டது;தருணம்-புதுமையுமாம். ஆலயம்,
ஸதநம் - வடசொற்கள்: சாதியொருமை: அது-பகுதிப்பொருள்விகுதி.(510)

9.கின்னரர்பயிற்றுமெழு கீதமெழுமொருசார்
மின்னனையபாவையரும்விஞ்சையருமொருசார்
அன்னநடைமங்கையரு மாரணருமொருசார்
மன்னுமலியக்கரு மடந்தையருமொருசார்.

     (இ-ள்.)ஒருசார் - ஒருபக்கத்தில், கின்னரர் பயிற்றும் எழு கீதம்
எழும் - கின்னரரென்னுந் தேவசாதியராற் பாடப்படுகிற எழுவகைச்
சுரங்களாலாகிற சங்கீதங்கள் பொருந்தும்;ஒருசார் - ஒரு பக்கத்தில்,
விஞ்சையர்உம் - வித்தியாதரர்களும், மின் அனையபாவையர்உம்-
மின்னலையொத்தசித்திரப்பதுமைபோலழகிய (அவர்) மகளிரும், (உள்ளனர்);
ஒருசார் - ஒருபக்கத்தில், ஆரணர்உம் - வேதம்வல்லமுனிவரும், அன்னம்
நடை மங்கையர்உம் அன்னப் பறவையின் நடைபோன்ற நடையையுடைய
(அவர்கள்) பத்தினியரும், (உள்ளனர்);ஒருசார் - ஒருபக்கத்தில், மன்னும்
மல் இயக்கர்உம்-நிலைபெற்றவலிமையையுடைய யக்ஷர்களும்,
மடந்தையர்உம் - (அவர்கள்) மகளிரும், (உள்ளனர்);(எ-று.)

     உயர்திணையாகஉம்மைபெற்று வருஞ் சொற்களிடையே அஃறிணைச்
சொல்லான ஆரணம்என்பது வருதற்கு இயல்பு இல்லாமையால் 'ஆரணமும்'
என்ற பாடம்சரியன்று.  விஞ்சையர்-மாலிகாஞ்சநம் முதலிய
மாயவித்தையுடையவர்;விஞ்சை-வித்யா என்னும் வடசொற் சிதைவு.
கின்னரர்-பதினெட்டுத்தேவகணங்களுள் ஒருவகையார்;மானுடமுகமும்
குதிரை மேனியுமுடையவரென்பர்: கின்னர மென்னும் வாத்தியத்தை
யெப்பொழுதுங் கொண்டிருத்தலால், இவர்களுக்குக் கின்னரரென்று
பெயர்போலும். எழுகீதம்-ஷட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்தியமம், பஞ்சமம்,
தைவதம், நிஷாதம் என்பன;முறையே இவற்றிற்குரிய எழுத்துக்கள்,
ஸரிகமபதநி என்பவையாம்:இவை தமிழில் குரல், துத்தம், கைக்கிளை,
உழை, இளி, விளரி, தாரம் எனப்படும்.                         (511)