மதம்வேள் என்று பிரித்து-காமமதத்தையுண்டாக்கும் வேள் எனினுமாம். நினைப்பதே, ஏகாரம்-நினைப்பது தகுதியன்று என்ற பொருளைத் தந்தது.(42) வேறு. 43.- தவம்புரியும் அருச்சுனனுக்குச் சூரியன் கோடையிலும் குளிர்ந்திருத்தல். பண்ணுக்கு வாம்பரித்தே ராதவனும் பணிந்துபசு பதியை நோக்கி, மண்ணுக்குத் தவம்புரியுந் தனஞ்சயற்குக் கோடையினு மதியம் போன்றான், எண்ணுக்கு வரும்புவனம் யாவினுக்குங்கண்ணா வா னிவனே யன்றோ, கண்ணுக்குப் புனைமணிப்பூண் கண்ணோட்ட மென்பதெல்லாங் கருணையன்றோ. |
(இ-ள்.) பண்-கல்லணை, உக்கு-அறுந்துவிழும்படி, வாம்- தாவியோடுகின்ற, பரி-குதிரை பூட்டிய, தேர்-இரதத்தையுடைய, ஆதவன்உம்- சூரியனும்,-பசுபதியை நோக்கி-பரமசிவனைக் குறித்து, பணிந்து-வணங்கி, மண்ணுக்கு-(பாசுபதாஸ்திரம் பெற்றுப் பகைவரைவென்று) இராச்சியத்தைப் பெறும்பொருட்டு, தவம் புரியும்-தவஞ் செய்கின்ற, தனஞ்சயற்கு- அருச்சுனனுக்கு, கோடையின்உம்-வெயிற்காலத்திலும், மதியம் போன்றான்- சந்திரனையொத்துக் குளிர்ந்திருந்தான்; (ஏனெனில்), எண்ணுக்கு வரும் புவனம் யாவினுக்குஉம்-(பதினான்குஎன்கிற) கணக்குக்கு வருகின்ற உலகங்களெல்லாவற்றிற்கும், கண் ஆவான்-கண்ணாகுபவன், இவன் ஏ அன்றோ-இச் சூரியனேயா மன்றோ?கண்ணுக்கு-நேத்திரத்துக்கு, புனை மணி பூண் - அணிதற்குரிய அழகிய ஆபரணம், என்பது எலாம் - என்று சொல்லுவது எல்லாம், கண்ணோட்டம்-(பிறர்மேற்) கண்சென்றவிடத்து உண்டாகின்ற, கருணை அன்றோ - கிருபையையே யன்றோ?(எ - று.) "கண்ணுக்கணிகலங் கண்ணோட்டம்" என்றபடி கண்ணுக்கு அழகு செய்வது கருணையென்பது பிரசித்தமாதலால், உலகமனைத்துக்குங் கண்ணாகவிருக்கின்ற சூரியன் மிகக் கருணையுடையவனாத் தவஞ்செய்யும் அருச்சுனனைக் கோடைக்காலத்திலும் சுடாமலிருந்தா னென்றார்: இவ்வருச்சுனன் கடுங்கோடையிலும் வெயிலை இலட்சியஞ் செய்யாதிருந்தா னென்றவாறு. "கண்ணோட்டமென்னுங் கழிபெருங் காரிகை, யுண்மையானுண்டிவ்வுலகு" என்றார், நாயனார். சூரியனுக்கு "ஜகச்சக்ஷு :" என்று ஒருபெயர் வடமொழியிலிருத்தல், "கண்ணாவானிவன்" என்ற இடத்துக் கருதத்தக்கது: சூரியனின்றிக் கண்ணொளி விளங்கா வாதலால், 'கண்ணாவானிவன்' என்றது என்பாரு முளர். பண்ணுக்கு வாம் பரி-இசையின் தாளத்துக்கு இயையத் தாவும் பரிஎனினுமாம். புவனம்-உயிர்கட்கு, ஆகுபெயர். கோடை - ஆனியும் ஆடியுமாகிய முதுவேனிற்காலம். |