புராணச்செய்யுளும்,"சகமார்க்கம் புலனொடுக்கித்தடுத்து வளியிரண்டுஞ் சலிப்பற்று முச்சதுர முதலாதாரங்க, ளகமார்க்கமறிந்த வற்றினரும் பொருள்களுணர்ந்தங் கணைந்துபோய் மேலேறி யலர்மதி மண்டலத்தின், முகமார்க்கவமுதுடலமுட்டத்தேக்கி முழுச் சோதிநினைந்திருத்தன் முதலாக வினைக, ளுகமார்க்கவட்டாங்க யோகமுற்று முழத்தலுழந்தவர் சிவன்றனுருவத்தைப்பெறுவர்' என்னுஞ் சிவஞானசித்தியார்பாடலும் உணர்க. இனி அங்கியா லங்கியை வெதுப்பி என்பதற்கு-சாடராக்கினியாகிய பசியை மூலாக்கினியாலடக்கி யென்றும், இங்கிதத்து என்பதை, இங்கு இதத்துஎனப்பிரித்து-இந்நிலையில் இனிமையாகஎன்றும் உரைப்பாருமுளர். இதுமுதற் பத்துக்கவிகள்-பெரும்பாலும் மூன்றாஞ்சீரொன்று மாச்சீரும், மற்றைமூன்றும் விளச்சீர்களுமாகிய அளவடி நான்கு கொண்ட கலிவிருத்தங்கள். (44) 45. | ஈண்டுதன்கருத்தினோ டியைந்தமாதவம் பூண்டிளமதிமுடிப் புண்ணியன்றனை வேண்டியவாறெலாம் விருப்பொடுன்னினான் பாண்டியனு பர்குலப் பாவைகேள்வனே. |
(இ-ள்.) பாண்டியன்-பாண்டியநாட்டரசனது, உயர்-மேலான, குலம்- குலத்திற்பிறந்த, பாவை-சித்திரப்பிரதிமைபோல அழகிய சித்திராங்கதைக்கு, கேள்வன்-கணவனான அருச்சுனன், ஈண்டு-இவ்வாறு, தன் கருத்தினோடு இயைந்த மா தவம்-தனது எண்ணத்துக்கு ஏற்ற பெரிய தவத்தை, பூண்டு- மேற்கொண்டு, இளமதி முடி புண்ணியன்தனை-இளஞ்சந்திரனை முடியிலுடைய பரிசுத்தனாகிய பரமசிவனை, வேண்டிய ஆறு எலாம்-(தான்) விரும்பியபடியெல்லாம் விருப்பொகு - பக்தியுடனே, உன்னினான் - தியானித்தான்;(எ - று.) கருத்துஎன்றது - பாசுபதாஸ்திரம் பெறவேண்டு மென்கிற எண்ணத்தை. ஈண்டு-சுட்டுநீண்டபெயர். ஈண்டு தன்கருத்து என்பதை வினைத்தொகையாகக் கொண்டு, கூடிய தனது கருத்துடனே என்றுமாம். இளமதிமுடிப்புண்ணியன் என்றது-தன் திருவடிகளை அடைந்தார்க்குக் குறைதீர்த்து அருளுந் தன்மையனென்பதுதோன்றவாகும்: கருத்துடையடைகொளி. சித்திரவாகனனென்னும் பாண்டியராசனதுமகளாகிய சித்திராங்கதை யென்பாளை அருச்சுனன் தீர்த்தயாத்திரை சென்றபொழுது மணஞ் செய்துகொண்டானாதலால், 'பாண்டிய னுயர்குலப் பாவை கேள்வன்' எனப்பட்டான். சந்திரன் தக்ஷமுனிவரது புத்திரிகளாகிய அசுவிநிமுதலிய இருபத்தேழு நக்ஷத்திரங்களையும் மணஞ்செய்து கொண்டு அவர்களுள் உரோகிணியென்பவளிடத்து மிகவுங்காதல் கூர்ந்து அவளுடனே எப்பொழுதுங் கூடிவாழ்ந்திருக்க, மற்றமகளிரது வருத்தம்நோக்கி அவனை 'க்ஷயமடைவாயாக' என்று சபித்த அம்முனிவரின்சாபத்தாற் சந்திரன் பதினைந்துகலைகளுங் |