54. | முன்புபெறுபுயமொய்ம்பனவன்மரு மத்தின்விசைபட மொத்தலும், என்புதசைநிணமிந்திரியம்வலியென்பவிவைநிலை சிந்தியே, துன்பமுறமனநொந்து தளர்வொடுதுத்திமணியுரகத்தின் மேல், வன்பினுடனுருமுற்றதெனவொளிமட்கி வெருவுடனுட்கினான். |
(இ - ள்.)முன்பு பெறு புயம் மொய்ம்பன் - தலைமைபெற்ற தோள்வலிமையையுடைய வீமன், அவன் மருமத்தின்-அம்மணிமானது மார்பிலே, விசை பட-வேகம் பொருந்த, மொத்தலும்-அடித்த வளவில்,- என்பு தசை நிணம் இந்திரியம் வலி என்ப இவை நிலைசிந்தி-எலும்பும் மாமிசமும் கொழுப்பும் உறுப்புக்களும் வலிமையும் என்று சொல்லப்படுகிற இவைகள் தத்தம் நிலைகுலையப்பெற்று,துன்பம் உற - துன்பம்மிக, மனம் நொந்து - மனம்வருந்தி, தளர்வொடு-தளர்ச்சியுடனே, துத்தி மணி உரகத்தின்மேல் வன்பினுடன் உரும் உற்றது என-படப்புள்ளிகளையும் மாணிக்கத்தையு முடைய நாகம் தன்மேல் வலியோடு இடிவிழப்பெற்றாற்போல,ஒளி மட்கி-ஒளிமழுங்கி வெருவுடன் - அச்சத்துடனே, உட்கினான்-(மணிமான்)நடுக்கமடைந்தான்;(எ-று.) என்ப -எனப்படுவன;பலவின்பால் வினையாலணையும்பெயர். தசை - இதுவே இலக்கணப்போலியாய்ச் சதையென எழுத்துநிலைமாறி வழங்குவது. இந்திரியம் - மெய் வாய் கண் மூக்குச் செவியென்னும் ஐம்பொறிகள். (556) வேறு. 55.-மாயயுத்தத்தால்தான் இவனைவெல்லலாமென்று தீர்மானித்துமணிமான் வானத்தி லேறுதல். வஞ்சனைபுரியுமா மாயப் போர்க்கலால் துஞ்சல னிவனெனத் துணிந்து சூழ்ச்சியால் நஞ்சென வெகுண்டுதன் னயனந் தீயுக விஞ்சையன் கதுமென விசும்பி லேறினான். |
(இ - ள்.)விஞ்சையன்-வித்தியாதரனானமணிமான்,-வஞ்சனைபுரியும் மா மாயம் போர்க்கு அலால் இவன் துஞ்சலன் என துணிந்து- 'வஞ்சனையாற்செய்யப்படுகிற பெரிய மாயையையுடைய யுத்தத்திற் கல்லாமல்(தருமயுத்தத்தில்) இவ்வீமன் இறவானென்று நிச்சயித்து, தன் நயனம் தீ உக நஞ்சு என வெகுண்டு - தனது கண்கள் நெருப்பைச் சொரியும்படி விஷம்போலக் கொடுமையாகக் கோபித்து, சூழ்ச்சியால் - மாயையினால்,கதுமென விசும்பில் ஏறினான்- விரைவாக ஆகாயத்தில் எழும்பினான்;(எ - று.) துஞ்சுதல்-தூங்குதல்;இச்சொல்லால் இறத்தலைவழங்குவது, மங்கல வழக்கு. கதுமென - விரைவுக்குறிப்பு. இதுமுதற் பத்துக்கவிகள்-பெரும்பாலும் மூன்றாஞ்சீரொன்று மாச்சீரும், மற்றைமூன்றும் விளச்சீர்களுமாகிய அளவடி நான்கு கொண்ட கலிவிருத்தங்கள். (557) |