உரைக்கலாம். உருப்பசி-பதரிகாச்சிரமத்தில் தவஞ்செய்து கொண்டிருந்த நாராயணமகாமுனிவரது ஊருவினின்றும் [தொடையினின்றும்] தோன்றினவள்; இவள் நாராயணமுனிவரது தவத்தைக் கெடுக்கும்படி இந்திரனா லேவப்பட்டு வந்த தேவஸ்திரீகளை மோகிப்பிக்கும்பொருட்டு அம்முனிவராற் சிருஷ்டிக்கப்பட்டவள். திலோத்தமை - அழகிய மகளிர்களின் உடம்பழகுகளில் எள்ளளவு எள்ளளவாக எடுத்துத் திரட்டிப் பிரமதேவரால் மேலானவளாகப் படைக்கப்பட்டவள்; இவர்களெல்லாம் பின்பு இந்திரனிடம் இருந்து, துருவாச முனிவரின் சாபத்தாற் கடலிலொளித்த அவன் செல்வங்களுடனே தாமும் ஒளித்து, பாற்கடல்கடைந்த காலத்து அதனினின்றுந் தோன்றின ரென்பான் 'வேலையில்வந்த மாதரீர்'என்றான். வேலை-கடற்கரை: கடலுக்கு இலக்கணை. ஆனவாறு - உங்களாலானமட்டிலெனினுமாம். (50) 51. - அருச்சுனன் தவஞ்செய்யுமிடத்துக்குத் தேவமாதர் செல்லுதல். என்றுகொண்டிந்திர னியம்பமற்றவன் துன்றியபேரவைத் தோற்றமிக்கவர் குன்றிரண்டெடுப்பதோர் கொடிமருங்குலார் சென்றனரவ்வுழிச் செய்யவாயினார். |
(இ-ள்.)இந்திரன்-தேவேந்திரன், என்று இயம்ப - என்று இவ்வாறு சொல்ல, அவன் - அவ்விந்திரனுடைய, துன்றிய பேர் அவை - (தேவர் முதலியோர்)நெருங்கிய பெரிய சபையில், தோற்றம் மிக்கவர் - சிறப்புமிகுந்தவர்களும், குன்று இரண்டு எடுப்பது ஓர் கொடி மருங்குலார்- இரண்டுமலைகளைத் தாங்குவதொரு பூங்கொடிபோன்ற இடையையுடைவர்களும், செய்ய வாயினார்-சிவந்த வாயையுடையவர்களுமாகிய தெய்வப்பெண்கள், அ உழி - (அருச்சுனன் தவஞ்செய்கின்ற)அந்த இடத்துக்கு, சென்றனர்-புறப்பட்டுப் போவாராயினர்; (எ-று.) என்றுகொண்டு என்பதில், கொண்டு - அசை: "என்று கொண்டினையகூறி யிணையடி யிறைஞ்சி"எனக் கம்பராமாயணத்திலுங் காண்க.கொடியையெடுப்பதோர் குன்றன்றிக்கே, குன்றுகளை யெடுப்பதோர் கொடிஎன ஒருவகைச்சாதுரியந் தோன்றக் கூறினார். குன்றிரண்டெடுப்பதோர் கொடி-உருவகவுயர்வுநவிற்சி: இல்பொருளுவமை என்பர் ஒருசாரார். செய்ய - குறிப்புப் பெயரெச்சம். (51) 52.-தேவமாதர் மன்மதனைநினைக்கஅவன் தன்படையுடன் அங்குவருதல். காமனைநினைந்தனர் காமராசனும் மாமலர்வாளியு மதுரசாபமும் தேமருமலர்க்கையிற் சேர்த்திச்சேனையோடு ஆமுறைபுகுந்தன னரனுமஞ்சவே. |
|