(இ - ள்.) அங்கு - அக்காமிய வனத்தில், இவர் - பாண்டவர்கள், புகுந்த பின்னர் - நுழைந்தபின்பு, அங்கியின் புகைஉம் ஆறி - (அங்கங்குத் தானாகவே பற்றியெரிகிற) காட்டுத்தீயின் புகையும் தணிந்து, பொங்கிய ஓமம் தீயின் புகையினால்-மிகுதியாயெழுந்த ஓமாக்கினியின் புகையினாலே, முகில் உண்டாக - மேகங்கள் உண்டாகவும்,-சிங்கம்உம் - சிங்கங்களும், துதிக்கை மாஉம் - துதிக்கையையுடைய யானைகளும், சேர்ந்து உடன்திரிய-(தமக்குள் பகைமை நீங்கி) ஒன்றுசேர்ந்து கூடத் திரியவும், சூழல் எங்கண் உம் - அவ்விடம் முழுவதும், இமகிரி சாரல் போன்று - இமயமலையின்சாரலையொத்து, அழகு பெற்றது - அழகை அடைந்தது; நல்லோர்களுள்ள இடத்தில் அக்கினிபயம் முதலியன ஒழிதலும், யாகம் முதலிய வைதிககாரியங்கள் முறைப்படி நிகழ்தலும், காலங்களில் மழை பெய்தலும், எல்லாப் பிராணிகளுக்கும் பகைமை யொழிதலும் இயல்பென்பது, நூற்றுணிபு. "நல்லார் ஒருவருளரே லவர் பொருட்டா, லெல்லார்க்கும் பெய்யு மழை,""மழையுந்தவமிலாரில்வழியில்லை," "நிலத்தியல்பு,வானமுரைத்துவிடும்,""அறன்காளையுறைநாடுகார், மின்னொற்று மழையுண்டு விளைவுண்டு"என்பவற்றை இங்கே உணர்க. புகையும் மாறி என்றும் பிரிக்கலாம். இமகிரி=ஹிமகிரி: பனிமலை. 'அங்கியும்புகையு மாறிப் பொங்கியவோமத்தீயாற் புகலருமுகிலுண்டாக' என்றும் பாடம். (3) வேறு. 4.-துருபதன் முதலிய சுற்றத்தார் அங்குப் பாண்டவரைக் கிட்டுதல். துருப னுந்திட்டத் துய்மனுஞ் சோமக நிருப ரானவர் யாவரு நேர்ந்துடன் விரவு தானை விராடனுஞ் சுற்றமும் மருவி னாரவ் வனத்திருந் தோரையே. |
(இ- ள்.) துருபன்உம்-துருபத மகாராசனும், திட்டத்துய்மன் உம் - (அவன் மகனாகிய) திருஷ்டத்யும்நனும், சோமக நிருபர் ஆனவர் யாவர்உம் - மற்றும் சோமககுலத்திற்பிறந்த அரசர்களெல்லோரும், நேர்ந்து உடன் விரவு தானை விராடன்உம் - மனமொத்துக் கூடவருகின்ற சேனையையுடைய விராடராஜனும், சுற்றம்உம் - (இவ்வரசர்களின்) பந்துக்களும், அ வனத்து இருந்தோரை - அந்தக் காமியவனத்திலிருந்த பாண்டவர்களை, மருவினார் - அடைந்தார்கள்; (எ - று.) துருபன்=த்ருபதன்: இவன் பாண்டவர்களுக்குப் பெண் கொடுத்த மாமன்: பாஞ்சால தேசத்தரசன். திட்டத்துய்மன் - பாண்டவர் மைத்துனன்; இவ்விருவரும் சோமககுலத்தவ ரென்று அறிக. நிருபர் - மனிதர்களைக் காப்பவர்; ந்ரு - மனிதர். துருபதன் என்பது துருபன்என விகாரப்பட்டு வந்தது. விராடன் - மச்சநாட்டரசன். |