எட்டிக்கொட்டை கசப்புச்சுவையையுடையதாதலால் வெறுக்கப்படுவதாதல்போலப் பிறர்பொருள் வெறுக்கத்தக்கதென்பான் 'பிறர்பொருளெட்டியேயெனவும்'என்றது. மறலி-உயிரைக்கொள்ளுங் கடவுள்:அவனாலும்மற்போரில் எதிர்த்து நிற்கமுடியாத உடல் வலிமை படைத்தவன் வீமனென்க. இச்செய்யுளின்பொருளைக்கொண்ட வடமொழிச்சுலோகம்-"மாத்ருவத்பரதாராணி-பரத்ரவ்யாணி லோஷ்டவத் | ஆத்மவத்ஸர்பூதாநி ய:பஸ்யதி ஸ பண்டித:" என்பது. இது, தருமபுத்திரன்கொள்கையென்று கன்னடபாரதம் கூறும். மறலியுமடிய மோதுமல் எனவும் பாடம். (648) 18.-அருச்சுனன்கூறுதல். ஊனமேயானவூனிடையிருக்கு முயிரினைத்துறந்துமொண்பூணா மானமேபுரப்பதவனிமேலெவர்க்கும் வரிசையுந்தோற்றமுமரபும் ஞானமேயானதிருவடிவுடையாய் ஞாலமுள்ளளவுநிற்றலினால் ஈனமேயுயிருக்கியற்கையாதலினாலென்றனன்வீமனுக்கிளையோன். |
(இ - ள்.)வீமனுக்கு இளையோன்-வீமசேனனுக்குஅடுத்த தம்பியான அருச்சுனன்,- (ஸ்ரீக்ருஷ்ணனைநோக்கி),-'ஞானம்ஏஆனதிருவடிவு உடையாய் - ஞானமயமாகவேயுள்ள திருவடிவத்தையுடையவனே! ஈனம்ஏ உயிருக்கு இயற்கை ஆதலினால்- இழிவே பிராணனுக்கு இயற்கையாயிருத்தலாலும், (மானமென்பது), ஞாலம் உள்ள அளவுஉம் நிற்றலினால்,இவ்வுலகம் உள்ளவரையிலும் அழியாது நிற்பதனாலும், ஊனம்ஏ ஆன - அழியுந்தன்மையையுடைய, ஊனிடை - இவ்வுடலுக்குள், இருக்கும் - இருக்கின்ற, உயிரினை- பிராணனை,துறந்துஉம் - விட்டாவது, ஒண் பூண் ஆம் - (ஆன்மாவுக்கு) ஒள்ளிய பூண்போலப் பிரகாசத்தைச் செய்கின்ற, மானம் ஏ - மானத்தையே, புரப்பது - (அழியாதபடி) பாதுகாப்பது, அவனிமேல்-இந்தப்பூமியின் மேலே, எவர்க்குஉம்- எப்படிப்பட்டவர்க்கும், வரிசைஉம் - சிறப்பும், தோற்றம்உம்- விளக்கத்தையுண்டாக்குவதும், மரபுஉம்-நற்குடிப்பிறப்பையுண்டாக்குவதுமாம்,' என்றனன்-;(எ - று.) பகவானைஞானஸ்வரூபியென்று வேதங்கூறும். உலகத்தில் உயிருக்குப் பிரகிருதிசம்பந்தத்தினால்தாழ்மைநேர்வதுஇயற்கை:ஆதலால் அத்தாழ்மையையே யடையும்படி மானத்தை விட்டிடாமல், அழியுந் தன்மையதான இவ்வுடல் போவதாயிருந்தாலும் பாராட்டாமல் ஒருவனுக்குஆபரணம் போன்று சிறப்பையும் தோற்றத்தையும் மரபையும் உண்டாக்கவல்ல மானத்தையே பாதுகாக்க வேண்டுமென்பது என் கொள்கை யென அருச்சுனன் கூறினானென்க. இச்செய்யுளின் பொருளையொட்டிய வடமொழிச்சுலோகம்-"ப்ராணம்வாபிபரித்யஜ்ய-மாநமரக்ஷேத்ஸதாபுத:| அநித்யா அத்ருவாப்ராணா:-மாநஸ்த்வாசந்த்ரதாரகம்"என்பது. இதனைக் கன்னடபாரதம் வீமன்கொள்கை யென்னும். அதில் அருச்சுனன் கொள்கையாகக் கூறப்பட்டுள்ள வடமொழிச் சுலோகம்- "நிமந்தரணோத்ஸவாவிப்ரா:-காவோநவத்ருணோத்ஸவா:|பர்த்ராகமோத் ஸவாநார்ய:-அஹம்க்ருஷ்ண! ரணோத்ஸவ:"என்பது. (649) |