பக்கம் எண் :

நச்சுப்பொய்கைச்சருக்கம்415

2.-பாண்டவர்விஷ்ணுசித்தமுனிவரின் ஆச்சிரமத்தை
யடைந்துஇனிதிருத்தல்.

வண்டுசிந்தியமதுத்துளி முகில்பொழிமழைத்துளியொடுசேர்ந்து,
கண்டுசிந்தையுநயனமு முருகுபைங்கானிடைக்கழிகேள்வி,
விண்டுசிந்தனென்றொருமுனியருந்தவவிபினமேவினராகிக்,
கொண்டுசிந்தனையறவிருந்தனர்குலக்குந்திமுன்பயந்தோரே.

     (இ - ள்.)வண்டு சிந்திய - (பூவிலிருந்து தேனையெடுக்கும்போது)
அவ்வண்டுகளாற் சிந்தப்பட்ட, மது துளி - தேன்துளி, முகில் பொழி மழை
துளியொடு - மேகங்கள்பொழிகின்ற மழைத்துளிகளுடனே, சேர்ந்து -
சேர்ந்திருத்தலாலே, நயனம்உம் சிந்தை உம் கண்டு உருகு-(தம்முடைய)
கண்களும் மனமும்(அவ்வழகினைக்)கண்டு (மகிழ்ச்சியால்)
உருகுதற்குஇடனான,பைங் கானிடை - பச்சைப்பசேரென்றுள்ள காட்டிலே,
கழிகேள்வி-மிக்க நூற்கேள்விகளையுடையவனான,விண்டுசிந்தன் என்ற
ஒருமுனி-விஷ்ணுசித்த னென்ற ஒரு முனிவனது,அருந் தவம் விபினம் -
(செய்தற்கு)அரிய தவத்திற்கு ஏற்றதான காட்டை, மேவினர்ஆகி -
அடைந்தவர்களாய்,-குலம் குந்தி முன் பயந்தோர்-சிறந்த குந்தியென்பவளால்
முன்பு பெறப்பட்டவரான பாண்டவர்கள்,-சிந்தனைஅற - கவலையில்லாமல்,
இருந்தனர்-;(எ - று.)

     சேர்ந்து-சேர;எச்சத்திரிபு. தவ விபினம் - தபோவனம்.  கொண்டு -
அசை.  குலம் - உயர்குலத்தையுடைய எனினுமாம்.               (656)

3.-துரியோதனாதியர்ஆலோசித்துப்
பாண்டவரைக்கொல்லத் துணிதல்.

ஆண்டுமற்றவருறைதருகாலையிலரவவெங்கொடியோனும்,
மூண்டழற்பொறிகன்றிய மனத்தினர் மூவருமுடன்முன்னி,
மீண்டுமிப்புவிவேண்டுவரிருக்கினாம்விரகுடன்முற்கோலிப்,
பாண்டுபுத்திரர்கோறுமென்றருளிலாப்பாவியர்துணிந்தாரே.

     (இ-ள்.) ஆண்டு- அந்த விஷ்ணுசித்தமுனிவருடைய தபோவனத்தில்,
அவர் - அந்தப்பாண்டவர், உறைதரு காலையில்- வசிக்கும்போது,-வெம்
அரவம் கொடியோன்உம் - கொடிய பாம்பைக் கொடியிலே யுடையவனாகிய
துரியோதனனும், அழல் பொறி மூண்டு கன்றிய மனத்தினர் மூவர்உம் -
நெருப்புப் பொறி பறக்கும் படி பற்றி யெரிகின்ற மனத்தையுடையவரான
(துச்சாதனன் சகுனி கர்ணன் என்ற) மூவருமாகிய, அருள் இலா பாவியர் -
கருணையென்பதுசிறிதுமில்லாத தீவினையாளரானஅந்நால்வரும்,-உடன்
முன்னி - ஒருசேர இருந்து ஆலோசித்து,-'இருக்கின்- (பாண்டுபுத்திரர்)
உயிரோடு இருப்பாரானால்,மீண்டுஉம் - மறுபடியும், இ புவி -
இந்தப்பூமியை, வேண்டுவர்-(தாம் அரசு புரியுமாறு) விரும்புவர்:
(ஆகையால்),-நாம்-,முன் கோலி-(வனவாச அஜ்ஞாதவாசங்களைஅவர்கள்
முடித்துவிட்டு வெளிப்பட்டுவருவதற்கு)முன்னமே ஆலோசித்து, விரகுடன் -
தந்திரமாக, பாண்டுபுத்திரர் கோறும் -