(இ-ள்.) முனி குலம் தொழு-(உலகப்பற்றையொழித்த) இருடிகளின் கூட்டம் வணங்குகின்ற, கடவுள்-தேவதை, யார்-யாவர்? (என்பது வினா: இதற்குவிடை):- மொய் துழாய் முகுந்தன் - நெருங்கிய திருத்துழாய்மாலையையணிந்த முகுந்தனாவன்; நனை மணம் கமழ் - பூவரும்பின் மணம் வீசுகின்ற, குழவினர்க்கு-கூந்தலையுடைய மகளிர்க்க, இயற்கை அது-இயல்பாய் அடையவேண்டிய அந்தக்குணம், யாது-எது? (என்பது வினா: விடை):- நாண்-நாணமாகும்: தனம் மிகுந்தவர்க்கு-செல்வம் மிக்கவர்க்கு, அரண்-பாதுகாவலாவது, ஏது-எது? (என்பது வினா: இதற்குவிடை):- தகை பெறு - தகுதிபொருந்திய, தானம்-ஈகையாம்: இரு செவிக்கு-(மனிதனுடைய) இரண்டுசெவிகளுக்கும், இனியது-இனிமையைத் தருவது, ஏது-எது? (என்பது வினா: இதற்கு விடை):- இளகுதலையர்-முதிராத மழலைச்சொற்கள் பேசுகின்ற குழந்தைகளின், இன்சொல்-இனிமையான சொல்லாகும்; (எ-று.) 'முனிவர்கள் தொழுங் கடவுள் முகுந்தன்' என்றமையால், மோக்ஷத்தைப்பெறவிரும்புவோர் அந்தத்திருமாலையே பணிவ ரென்ற தாயிற்று. முகுந்தன்' என்ற வடசொல்-மோக்ஷலோகத்தைத் தருபவன் என்று பொருள்படும். இச்செய்யுளின் நான்காம் அடியில், "குழலினிது யாழினிது என்பதம்மக்கள், மழலைச்சொற்கேளாதவர்" என்ற திருக்குறள், கருதத்தக்கது. துழாய்=துளஸீ: வடசொல். அரண்-ஸரணம்: வடசொல் திரிபு. (710) 57. | நிற்பதேதுகொனீடிசையொன்றுமேநிற்குங் கற்பதேதுகொல்கசடறக்கற்பதேகல்வி யற்பமாவதேதனைத்தினுமயற்கரத்தேற்றல் சிற்பமாமிவைசெப்பெனச்செப்பினன்சிறுவன். |
(இ-ள்.) நிற்பது-நிலைத்துநிற்பது, ஏதுகொல்-எதுவோ? (என்பதுவினா: இதற்குவிடை):-நீடு இசை ஒன்றுஉம்ஏ-நீண்ட கீர்த்தியொன்றும், நிற்கும் - நிலைத்துநிற்கும்; கற்பது ஏது கொல்-கற்றுக்கொள்ளவேண்டுவது, எதுவோ? (என்பதுவினா:இதற்குவிடை):- கசடு அற-குற்றமில்லாமல், கற்பது - படிக்கவேண்டுவதாகிய, கல்வி-படிப்பேயாகும்; அனைத்தின்உம் - எல்லாத்தொழிலினுள்ளும், அற்பம் ஆவது - (ஒருவனுக்குச் சிறுமையுண்டாக்குவது, ஏது-எது? (என்பது வினா: இதற்குவிடை):- அயல் கரத்து-பிறருடைய கையிலருந்து, ஏற்றல்-(ஒருபொருளை) யாசித்துப்பெறுதலாம்; சிற்பம் ஆம் இவை - அருமையாகிய இக்கேள்விகளுக்கு, செப்பு-விடை யளிப்பாய், என-என்று (யமதருமன்) வினாவ, -சிறுவன்-(அந்தயமனது) புத்திரனாகிய யுதிஷ்டிரனும், செப்பினன்-(உடனுக்குடனே) விடையளித்தான்; (எ-று.) ஐம்பத்தைந்தாம்பாடல்முதல் இந்தப்பாடல்வரையில் வினாக்கட்குவிடை உடனுக்குடனே வந்திருத்தலைக்காண்க. "ஒன்றாவுலகத்துயர்ந்தபுகழல்லால், பொன்றதுநிற்பதொன்றில்" என்ற குறளால், புகழென்பதொன்றுமே பூமியில் எப்போதும் அழியாதுநிற்பதாதலையறிக. கல்விக்குக்கசடுஆவது - ஐயந்திரிப்புகளையுடையதாதல்: ஐயமாவது - சந்தேகவுணர்வு: திரிபுஆவது - ஒன்றை மற்றொன்றாக நினைக்கும் மாறுபாடான உணர்வு. (711) |