இதுமுதற் பன்னிரண்டு கவிகள் - பெரும்பாலும் முதற்சீர் மாச்சீரும் மற்றைமூன்றும் விளச்சீர்களுமாகிவந்த கலிவிருத்தங்கள். 5.- மற்றும் அன்புள்ளவர்களும் கற்ற அறிஞரும் அங்கே வந்துமொய்த்தல். மற்றுமற்று மகீபரிலன்பினான் உற்றவுற்ற வுறவுடையோர்களும் கற்றகற்ற கலைவிதமாக்களும் சுற்றுமொய்த்தனர் தோமறுகேண்மையார். |
(இ-ள்.) தோம் அறு கேண்மையார் - குற்றமற்ற நட்பையுடையவரான, மற்றுஉம் மற்றுஉம் மகீபரில் - இன்னும் வேறு வேறு தேசத்தரசர்களில், அன்பினால் உற்ற உற்ற - அன்பால் மிகவும் நெருங்கிய, உறவு உடையோர்கள்உம் - பந்துத்துவமுடையவர்களும், கற்ற கற்ற கலைவிதம் மாக்கள்உம்-மிகுதியாய்க்கற்ற நூல்களின் வகைகளையுடைய மனிதர்களும், சுற்றுஉம் மொய்த்தனர்-(பாண்டவர்களுக்குச்) சுற்றிலும் நெருங்கினார்கள்; (எ- று.) அடுக்குக்கள் - மிகுதிப்பொருளன. மற்று என்னும் இடைச்சொல், பிறிது என்னும் பொருளது. கேண்மை-க்ஷேமசமாசாரங்களைக் கேட்பது (விசாரிப்பது) என்னும் பொருள்பற்றி, நட்பையுணர்த்திற்று. மகீபர்-பூமியைக் காப்பவர்; மஹீ-பூமி. இயல்பாக நிற்கும் மாக்களென்னுஞ்சொல், அறிவில்லாத மனிதரை உணர்த்தும்: மாக்களெனப்படுவார், மனவுணர்ச்சியின்றிஐம்பொறியுணர்ச்சி மாத்திரமே யுடையவர்: மக்களெனப் படுவார், ஐம்பொறியுணர்வோடு மனவறிவும் உடையவர்: இவ்வேறுபாடு "மாவுமாக்களுமையறிவினவே,""மக்கடாமேயாறறிவுயிரே"என்னும் தொல்காப்பிய மரபியற் சூத்திரங்களைக்கொண்டு அறிக. (5) 6.-ஸ்ரீ க்ருஷ்ணபகவான் வருதல். மாதவத்தின் பயனெனமாதவன் யாதவக்குலத் தேறிமையோர்பதி ஆதவத்துக் கருநிழல்போலருள் வேதவித்தக வீரனுமேவினான். |
(இ - ள்.) மா தவன் - இலக்குமிக்குக் கணவனும், யாதவர் குலத்து ஏறு-யதுசம்பந்தமானகுலத்தில் தோன்றிய ஆண்சிங்கம் போன்றவனும், இமையோர் பதி-தேவர்களுக்குத் தலைவனும், ஆதவத்துக்கு அரு நிழல் போல் அருள்-வெயிலிற்பட்ட வருத்தத்தை ஒழிப்பதற்கு உதவுகின்ற அருமையான நிழல்போலப் (பலவகைத்துன்பங்களை யொழிப்பதற்குக்) கருணை செய்கின்ற, வேதம் வித்தகம் வீரன்உம்-வேதங்களின் ஞானத்துக்கு விஷயமான மகாவீரனுமாகிய கண்ணபிரானும், மாதவத்தின்பயன் என- (பாண்டவர்கள் செய்த) பெருந்தவத்தின் பயன்போல, மேவினான்-(அங்கு) வந்தான்; (எ-று.) |