பக்கம் எண் :

அருச்சுனன் றவநிலைச்சருக்கம்53

71.-அருச்சுனன் தன்செயலைப்பரிகசித்த
இந்திரனுக்குத்தன் மனவுறுதி கூறல்.

சிரித்ததேனென்னமீண்டுந் திருமகன்றன்னைநோக்கி
வருத்தமேயன்றியிந்த மாதவம்பயனின்றென்றான்
உருத்திவனவனைநோக்கி யுயிரிறுமளவுமிந்தக்
கருத்துநான்வீடேனென்றான் கடுங்கனலூடுநின்றான்.

     (இ-ள்.)சிரித்தது ஏன் என்ன-(முனிவனே! நீ)சிரித்தது
எக்காரணத்தால்?  என்று (அருச்சுனன்)வினாவ,-(இந்திரன்),மீண்டுஉம்-
மறுபடியும், திரு மகன் தன்னை நோக்கி-(தனது)சிறந்த குமாரனான
அவ்வருச்சுனனைக் குறித்து, 'இந்தமா தவம்-இப்பெரிய தவம், வருத்தம்ஏ
அன்றி-வருத்தந்தருவது மாத்திரமேயல்லாமல், பயன் இன்று-நீ (கருதிய)
பயனைத் தருவதாகாது,'
என்றான்-என்று சொன்னான்;(சொல்ல),கடு கனல்
ஊடு நின்றான்-கொடிய பஞ்சாக்கினிமத்தியிலே நிற்பவனாகிய, இவன் -
அருச்சுனன்,-உருத்து-கோபித்து,அவனை நோக்கி-இந்திரனைப்பார்த்து,
'உயிர்இறும் அளவுஉம்-(எனது)உயிர்நீங்கும் மட்டும், இந்த கருத்து நான்
வீடேன்-இவ்வெண்ணத்தை யான் விடமாட்டேன்,'என்றான்-என்று
சொன்னான்;(எ-று.)

   வீடேன்=விடேன்;நீட்டல்விகாரம். இங்கே, கோபம்-
தன்னையலைத்தல்காரணமாக உண்டாயிற்று.  இன்று-எதிர்மறை ஒன்றன்பாற்
குறிப்புமுற்று.                                                (71)

72.-இந்திரன்தனது உண்மைவடிவோடு வெளிப்பட்டு
அருச்சுனனை அனுக்கிரகித்தல்.

மைந்தனிம்மாற்றங்கூற மனனுறமகிழ்ந்துதெய்வத்
தந்தையும்விருத்தவேடந் தனையொருகணத்தின்மாற்றி
இந்திரனாகியமுன்னின் றிப்பெருந்தவத்தால்வந்து
பைந்தொடிபாகன்பாசு பதமுனக்குதவுமென்றான்.

     (இ-ள்.)மைந்தன் - புத்திரனான அருச்சுனன், இ மாற்றம் கூற-
இவ்வார்த்தையைச் சொல்ல, தெய்வம் தந்தைஉம் -
தெய்வத்தன்மையையுடைய பிதாவான இந்திரனும், மனன் உற மகிழ்ந்து-
மனம் மிகவுஞ் சந்தோஷித்து, விருத்த வேடம் தனை-கிழவுருவத்தை, ஒரு
கணத்தில் மாற்றி-ஒருக்ஷணப்பொழுதிலே நீக்கி, இந்திரன் ஆகி-தேவேந்திர
வடிவமாய், முன்நின்று-எதிரில் நின்று, (அருச்சுனனைநோக்கி),'இபெரு
தவத்தால்-இந்தப் பெரிய தவங்காரணமாக, பைந்தொடி பாகன்-பசுமையான
(பொன்னாலாகிய)
தொடியென்னுங் கையணியையுடைய உமாதேவியை
இடப்பக்கத்திற்கொண்டபரமசிவன், வந்து-எதிர்ப்பட்டுவந்து, பாசுபதம்உனக்கு
உதவும்-பாசுபதாஸ்திரத்தை உனக்குக் கொடுப்பான்'என்றான்-என்று
சொன்னான்;(எ-று.)