சமயத்தில் வந்து உதவுதல்பற்றி, தவப்பயன் கண்ணபிரானுக்கு உவமை; எவ்வளவோ பெருந்தவஞ்செய்திருந்தாலன்றிக் கண்ணபிரானது வருகை நேரா தென்றவாறு. யாதவன்-யதுகுலத்துத் தோன்றியவன். யதுஎன்பான், சந்திரகுலத்துத் தோன்றிய யயாதியின் குமாரருள் ஒருவன். ஏறு- ஆண்பெயர். வெயிலிலடிபட்டவர்க்கே நிழலினருமை தெரியுமென்பது, இங்குக் கருதத்தக்கது. ஆதவம்-ஆதபம்; நன்றாகத் தபிப்பது. 'ஆதவத்துக்கு அருநிழல்' என்பதை, "துன்பத்திற்கு யாரே துணையாவார்," "மறத்திற்கு மஃதே துணை," 'பித்தத்துக்கு இஞ்சி நல்லது' என்பனபோலக் கொள்க. வேதம் வித்தகன் - வேதத்தினால் அறிதற்கு உரியவன் எனினுமாம். வேதம் என்பதற்கு - நன்மை தீமைகளை விதிவிலக்குக்களால் அறிவிப்பது என்பது அவயவப் பொருள். வீரனும், உம்-இறந்தது தழுவியது. (6) 7.-தருமனிடத்து வந்தவர் அன்போடு கூறத்தொடங்குதல். பாரிழந்தவிப் பாதகச்சூதுகேட்டு ஈருநெஞ்சின ரேமுறுநோக்கினர் பேரறன்றரு பிள்ளையைப்பார்த்தருள் கூரவன்பொ டிவையிவைகூறுவார். |
(இ-ள்.) பார் இழந்த-(பாண்டவர்கள்) பூமியை இழப்பதற்குக் காரணமான, இ பாதகம் சூது-பாவத்தைத் தருவதான இந்தச் சூதாட்டம் நடந்த செய்தியை, கேட்டு - செவியுற்று, ஈரும் நெஞ்சினர் - பிளந்த மனமுடையவர்களும், ஏம் உறு நோக்கினர் - வருத்தம் மிகுந்த பார்வையுடைவர்களுமாகிய துருபதன்முதலிய பந்துக்களும் சினேகிதர்களும்,--பேர் அறன் தரு பிள்ளையை பார்த்து - பெருமையையுடைய தருமக்கடவுள் தந்த குமாரனாகிய யுதிட்டிரனை நோக்கி, அருள் கூர - கருணைமிக, அன்பொடு - அன்புடனே, இவை இவை கூறுவார் - இந்த இந்த வார்த்தைகளைச் சொல்வாரானார்கள்; (எ - று.) -அவற்றை, மேல் நான்கு கவிகளாற் கூறுகின்றார். அறன் - அறத்திற்குஉரிய கடவுள்: யமன். தருமபுத்திரன் யமதேவனது அருளாற் குந்திதேவியினிடம் பிறந்தவ னாதலால், அவனை "அறன்றருபிள்ளை'என்றது: இனி, இத்தொடர் - தருமத்தைச் செய்கின்ற பிள்ளையென்றும் பொருள்படும். பிள்ளை - இளமைப் பெயர்: இங்கு, உயர்திணைக்கு வந்தது. வன்பொடு என்று பிரித்து, வீரத்தோடு எனினுமாம். இழந்த என்னும் பெயரெச்சம், காரியப்பொருளது. 'நோய்தீர்ந்த மருந்து' என்பது போல. ஏமுறுதல்=ஏமமுறுதல்; ஏமம் என்பதற்கு - களிப்பு என்றும் பொருளுண்டு. அருளாவது - ஒருசம்பந்தமு மில்லாமலே இயல்பாக எல்லாவுயிர்களின்மேலுஞ் செல்லுங் கருணையென்றும், அன்பாவது- மனைவியும் மக்களும் முதலிய பந்துக்க |