பக்கம் எண் :

8பாரதம்ஆரணிய பருவம்

     பூலோகத்தில் நடக்கும் போர்களைத் தேவர்கள் ஆகாயத்தில்
வந்திருந்து பார்ப்பது இயல்பு ஆதலால் 'உம்பர் காண' எனப்பட்டது.
இனி, உயிர் உம்பர் காண என இயைத்து - (அவர்களுடைய)உயிர்
வீரசுவர்க்கத்தைச் சென்று சேரும்படி என்றும் பொருள் கூறலாம்.
தும்பைமாலை-போர்செய்பவர்  தாம்  வெல்வதற்கு அடையாளமாகச்
சூடுவது.                                                 (9)

10. - சிலர், வஞ்சகச் சூதாடிய சகுனியை மாய்க்க
எழுங்கள் என்றுகூறுதல்

வஞ்சகச்சுப லன்றருமைந்தனை
வெஞ்சமத்தினில் வீழக்கணத்திடைச்
செஞ்சரத்தின் வழியுயிர்செல்லவே
எஞ்சுவிக் கவெழுமென்றியம்புவார்.

     (இ-ள்.)வஞ்சகன் - (சூதாடி)வஞ்சனை செய்தவனாகிய, சுபலன் தரு
மைந்தனை-சுபலனென்பவன்பெற்ற புத்திரனான சகுனியை, கணத்திடை-
கணப்பொழுதினுள்ளே, வெம் சமத்தினில் வீழ-கொடிய போரில் (உடம்பு)
வீழவும், செம் சரத்தின் வழி-செந்நிறமான அம்பு தைத்தவழியே, உயிர்
செல்ல-உயிர் நீங்கவும், எஞ்சுவிக்க-நாசமடைவிக்கும்பொருட்டு, எழும்-
புறப்படுங்கள், என்று-, இயம்புவார்-சொல்வாரானார்கள்; (எ-று.)

     சுபலன் = ஸு பலன்: நல்லவலிமையையுடையவன்:   இவன்   காந்தார
தேசத்தரசன்: திருதராட்டிரன் மனைவியின் தந்தை.  பகைவர்களது உதிரந்
தோய்ந்திருத்தல் தோன்ற,'செஞ்சரம்'என்றார்; வளைவில்லாத சர
மென்றுமாம்.  எழும்=முன்னிலையேவற்பன்மை.                     (10)

11. -கர்ணனுடன் பொருவோமென்று சிலர் கூறுதல்.

சீதவெண்குடை வேந்தர்தந்தேர்விடுஞ்
சூதன்மைந்தன் சுயோதனன்றோழனை
மாதிரங்களில் வானவர்காணவிப்
போதுடற்றுவ மென்னப்புகலுவார்.

     (இ-ள்.) சீதம்-குளிர்ச்சியைத் தருகின்ற, வெள்-வெண்மையான, குடை
- குடையையுடைய, வேந்தர்தம் - (குருகுலத்து) அரசர்களுக்கு, தேர் விடும்
- தேரையோட்டுகின்ற, சூதன் - சாரதியாகிய அதிரதனது, மைந்தன்-
குமாரனும், சுயோதனன் தோழனை-துரியோதனனது சினேகிதனுமாகிய
கர்ணனை, வானவர் - தேவர்கள், மாதிரங்களில் - (ஆகாயத்தில்)
எல்லாத்திக்குகளிலுமிருந்து, காண - பார்க்கும்படி, இ போது -
இப்பொழுதே, உடற்றுவம் - போர்செய்வோம், என்ன - என்று, புகலுவார் -
சொல்லுவாரானார்கள்; (எ - று.)

     துரியோதனன் பாண்டவர்களை வருத்துவது தம்பிமார் பலமும்
சகுனியின் பலமுங் கர்ணனது பலமுங்கொண்டே யாதலால்,