எய்த வில் போர் கண்டனம்-நீ இப்பொழுது அம்பெய்த வில்லின் போரைப் பார்த்தோம்;அடடா-!வில் பிடிக்கும் விரகு அறியோம்-(உனக்குமுன்னே) வில்லைப் பிடிக்கின்ற தந்திரத்தையும் (யாம்)அறியோம்;உன்னிடத்துஏ வேதம் வில் போர் கற்போம் - வேதமந்திரங்களுடனே செய்கின்ற வில்லின்போரை உன்பக்கலிலே (யாம்)கற்றுக்கொள்வோம்,'என்று-என்று பரிகாசமாகச் சொல்லி, மற்று-பின்பு, ஒரு கணை-ஓரம்பை, அவன்மேல்- அருச்சுனன்மேல், விட்டான்-தொடுத்தான்;(எ-று.) அருச்சுனன் சிவவேடன் முடிமீது அம்பெய்தது கண்ட பிரமத கணங்களாகிய வேடர்யாவரும் அவ்வருச்சுனனோடும் பொருதற்கு எழ, சிவவேடன் தன் கைச்சைகையால் அவர்களை அமர்த்தி அருச்சுனனை ஏளனஞ்செய்து அவன்மீது ஓரம்பைத் தொடுத்துவிட்டனனென்பதாம். கிராதர்க்கு, அல்-கருநிறமும் அடர்ந்திருத்தலும் பற்றிய உவமை. 'நிற்போன்'என எதிர்காலத்தாற் கூறியது-இயல்பினால் வந்த காலவழுவமைதி. அடடா என்னும் முன்னிலையிடைச்சொல்லடுக்கு, இகழ்ச்சிதோன்ற நின்றது. கண்டனமேடா என்றும் பாடம். (102) வேறு. 103. | பீலிமுடி யோன்விடுபி றைக்கணையை வேறொருபி றைக் கணையி னால்வி லகிவிற், கோலிவடி வாளிமழை சிந்தினன்ம ழைக் கரிய கொண்டலென நின்ற குமரன், மூலிவடி வாமெயினன் மேல வைபடாமன்முனை மண்மிசை குளிக்க முரணார், வேலியிடு மாறெனவி ழுந்தனவிழுந்ததனை விசயனனி கண்டு வெகுளா. |
இதுவும், மேற்கவியும் - ஒருதொடர். (இ-ள்.) மழை கரிய கொண்டல் என நின்ற-மழைபெய்கின்ற கறுத்த நீர்கொண்ட மேகம்போலக் (கருநிறமுடையவனாய்) நின்ற, குமரன் - அருச்சுனன்,-பீலி முடியோன் விடு பிறை கணையை-மயிற்பீலிமாலையையணிந்த திருமுடியையுடைய சிவபிரான் (தன்மேல்) விட்ட அர்த்தசந்திர பாணத்தை, வேறு ஒரு பிறை கணையினால் விலகி-வேறோரு அர்த்தசந்திர பாணத்தால் தடுத்து, வில் கோலி - வில்லை நன்றாகவளைத்து, வடி வாளி மழை சிந்தினன் - கூர்மையான அம்புகளை (வேடன்மீது) மழைபோல மிகுதியாகச் சொரிந்தான்; அவை - அவ்வம்புகளெல்லாம், மூலி வடிவு ஆம் எயினன் மேல்-(எல்லாபொருள்களுக்குங்) காரணமாகவுள்ள சிவனது ரூபமான வேடன்மேல், படாமல்-சென்றுதைக்காமல், முரண் ஆர் வேலி இடும் ஆறு என-வலிமைபொருந்திய வேலி பொருந்தும் விதம்போல, முனை-நுனிகள், மண்மிசை குளிக்க-பூமி மேலே அழுந்தும்படி, விழுந்தன-(அவனைச் சுற்றிலும்) விழுந்துவிட்டன; விழுந்ததனை-(அங்ஙனம்) விழுந்ததை, விசயன்- அருச்சுனன், கண்டு-பார்த்து, நனி வெகுளா-மிகவுங் கோபித்து,-(எ-று.)- 'வெகுளா' என்பது, மேற்கவியில் 'விடுத்தனன்' என்பதோடு முடியும். |