நீர்மழையை விடாது பொழிகின்ற மேகம்-இடைவிடாமல் அம்புமழை பொழிகின்ற அருச்சுனனுக்கு ஏற்ற உவமையாம். அருச்சுனன்எய்த கணை, சிவவேடன்மேல் விழாது அவனைச்சுற்றிலும் வீழ்ந்து அவனுக்கு ஒரு வேலியிட்டாற்போ லாயிற்றென்க. விலகி என்பதை-பிறவினைப்பொருளில் வந்த தன்வினையென்றாயினும், விலக்கி என்பதன் தொகுத்தல்விகாரமென்றாயினும் உணர்க. வடித்தல்-நெருப்பிற்காய்ச்சி அடித்துக் கூர்செய்தல். கொண்டல்-நீரைக்கொள்வது எனக் காரணப்பெயர். மூலி-மூலமாக உள்ளவன். முனை-கூர்வாய். மூலவடிவாமென்றும் பாடம். இது முதற் பதின்மூன்றுகவிகள்-பெரும்பாலும் முதலைந்தும் விளங்காய்ச்சீர்களும், ஆறாவது தேமாச்சீரும், ஏழாவது புளிமாச்சீருமாகிய எழுசீராசிரிய விருத்தங்கள். (103) 104. | வேணிமுடிவேடன் மிசைவேறு மொருசாயகம் விடுத்த னன்விடுத்தகணைவில், நாணியொடுமுன்பினொடுபின்புதொடுகின்ற கணைநடுவணறவெட்டுதலுமே, கோணிய விளம்பிறை முடித்தவன்வெகுண்டுபல கோல்கள்விடவிந்த்ரகுமரன், பாணியுடனேதொடைநடுங்கியயனின்றதொரு பாதவமருங்கணுகினான். |
(இ-ள்.)வேணி-சடையைக்கொண்ட, முடி-திருமுடியையுடைய, வேடன்மிசை-சிவவேடன்மேல், வேறுஉம் ஒரு சாயகம் விடுத்தனன்- வேறொரு அம்பை (அருச்சுனன்)எய்தான்;விடுத்த கணை-விட்ட அம்பு, வில் நாணியொடு-வில்லினது நாணியினின்றும், முன்பினொடு-வலிமையுடனே, பின்பு தொடுகின்ற கணை - (சிவபிரான்)பின்பு எய்த அம்பை, நடுவண் அற-நடுவிலே முறியும்படி, வெட்டுதலும்-பிளந்த அளவில், கோணிய இளம்பிறை முடித்தவன்-வளைவாகிய இளஞ்சந்திரனை முடியில்தரித்த சிவவேடன், வெகுண்டு-கோபித்து,பல கோல்கள் விட-பல அம்புகளை எய்ய, (அதனால்மிகத்தளர்ந்து),இந்த்ர குமரன்-தேவேந்திரனது திருமகனான அருச்சுனன், பாணியுடனே தொடை நடுங்கி-கைகளும் தொடைகளும் நடுக்கமுற்று, அயல் நின்றது ஒரு பாதவம் மருங்கு அணுகினான்- பக்கத்திலே பொருந்தியதொரு மரத்தின் சமீபத்தைச் சேர்ந்தான்;(எ-று.) சிவபிரான் தொடுத்த அம்பு நடுவில் முறியும்படி ஓரம்பை அருச்சுனன் தொடுத்துவிட, சிவவேடன் கோபித்துப் பல அம்புகளை எய்ய, அருச்சுனன் தளர்ந்து எதிர்நிற்கமுடியாமல் நடுக்கமெடுத்து அருகிலிருந்த ஒரு மரத்தைச் சார்ந்து நின்றன னென்க. நாணியொடு என்பதில், ஒடு உருபு-ஐந்தாம் வேற்றுமையின் நீக்கப்பொருளில் வந்ததனால், உருபுமயக்கம். நடுவண்- நடுவாகிய இடம்:அண் - இடப்பொருளுணர்த்தும்விகுதி: அவண், இவண் என்பவற்றிலுங் காண்க. ஸாயகம், இந்த்ரகுமரன், பாணி - வடசொற்கள். கோணிய-இறந்தகாலப்பெயரெச்சம். நாணியற என்றும்பாடம். (104) |