எழுவகைத் தாதுக்களில் என்புமுதலிய நான்கும் வலிமைக்குச் சிறத்தலால், அவற்றை எடுத்துக்கூறினார். வயிரா என்னும் இறந்தகால வினையெச்சத்தில், வயிர மென்பதன் விகாரமாகிய வயிர் - பகுதி. காரி, கருமையென்பதன் திரிபாகிய கார்-பகுதி;இ - விகுதி. காரி-வயிரவனென்று பொருள்கூறி, மிருகாதிபதியும் காரியும் எனினுமாம். வயிரவமூர்த்தி பிக்ஷாடனஞ் செய்தபோது வெகு அழகிய வடிவோடு சென்றா னென்று கூர்மபுராணங் கூறுவதுங் காண்க. மிருகாதிபதி - யானைக்குத் தலைவனாகிய, காரி - இந்திரன் என்றாருமுளர். உமாதேவி எண்ணான்கறம் வளர்த்த வரலாறு, காஞ்சிப்புராணத்திற் காணப்படும். (109) 110. | உள்ளடிவிரற்றலைகள் புறவடிபரட்டினுட னுயர்கணைக் கான்முழந்தாள், தள்ளரியவூருவுயர்தாழ்வரைகளொத்தகடி தடமு தரமார்புதிணிதோள், துள்ளிவருசெங்கையொடுமுன்கைபிடர்நெற்றியொடுசூடமென வெண்ணுபடையால், வள்ளலெனையாளுடையமாதவனுமாதவனுமல்லமர் தொடங்கியுறவே. |
(இ-ள்.)உள் அடி - உள்ளங்கால்களும், விரல் தலைகள் - விரல்களின் நுனிகளும், புறம் அடி-புறங்கால்களும், பரட்டினுடன்- காற்பரடுகளும், உயர் கணைக்கால் - (வலிமையிற்)சிறந்த கணுக்கால்களும், முழந்தாள்-முழங்கால்களும், தள் அரிய ஊரு-(வலிமைமிகுதியால்) நீக்குதற்கு அருமையான தொடைகளும், உயர் தாழ் வரைகள் ஒத்த - உயர்ந்து தோன்றுகின்ற மலைத்தாழ்வரைகளை ஒத்திருக்கின்ற, கடி தடம் - அரையும், உதரம்-வயிறும், மார்பு-மார்பும், திணிதோள் - வலியதோள்களும், துள்ளி வரு செம் கையொடு - துள்ளிக்கொண்டு (முன்னே விரைந்து) வருகிற சிவந்தகைகளும் முன் கை முன்னங்கைகளும், பிடர்-பின்கழுத்தும், நெற்றியொடு - நெற்றியும், சூடம் - உச்சியும், என - என்று, எண்ணு - எண்ணிச் சொல்லப்படுகிற, படையால்-ஆயுதங்களினால் [வேறே ஆயுதமெடாமல் இவ்வுறுப்புகளையே போர்க்கருவியாகக் கொண்டு என்றவாறு],வள்ளல்-வரையாதுகொடுக்குந் தன்மையையுடையவரும், எனை ஆள் உடைய மாது அவன்உம் - என்னை ஆளுதலுடைய உமாதேவியை ஒருபாகத்திற் கொண்டவருமாகிய சிவபிரானும், மா தவன்உம்-மிகுந்த தவத்தையுடைய அருச்சுனனும், மல் அமர் - மற்போரை, தொடங்கியுற - தொடங்க,-(எ-று.)-'வீசினன்'என அடுத்த கவியோடு முடியும். உள் அடி - காலின் உள்ளிடமென்றும், புறவடி - காலின் மேலிட மென்றும் பொருள் படுதலால், முன்பின்னாகத் தொக்கு வந்த ஆறாம்வேற்றுமைத்தொகை;இலக்கணப்போலி. "மெய்சென்று தாக்கும் வியன்கோலடிதன்மேற், கைசென்று தாங்குங் கடிது"ஆதலால், 'துள்ளிவரு செங்கை'எனப்பட்டது. ஈற்றடியில், மாதவன் உமாதவன் எனப்பிரித்து - என்னை அடிமையாகவுடைய வள்ளலாகிய பெருந்தவமுடைய அருச்சுனனும், உமா தேவியினுடைய கணவனான உருத்திரனும் என்றும் பொரு |