கொள்ளைகொள்ள எண்ணினான்; மற்றையேழுவசுக்களும் அவனுக்கு உதவிசெய்யவே, எண்மரும் இரவிற் சென்று பசுவைக் கவர்ந்தனர்; அதனை யுணர்ந்த வசிட்டமகாமுனிவன் அஷ்டவசுக்களையும் மானுடசன்ம மெடுக்கவும், அவர்களுள் மனைவிசொற்கேட்ட பிரதானனான பிரபாசனைப் பூமியிற் பலநாள்வாழ்ந்து பெண்ணின்பமற்றிருக்கவும் சாபங்கொடுத்தான்; எட்டுவசுக்களும் சந்தனுவுக்குக் கங்கையின் வயிற்றிற் பிறந்தனர். முதல்பிறந்த ஏழுகுழந்தைகளையும், பிறந்த அப்பொழுதே தாய் கங்காநதியில் எடுத்தெறிந்து விட்டாள்; எட்டாவதுபிள்ளை பிறந்தவுடனே தந்தை 'அக்குழந்தையைக் கொல்லலாகது' என்று மறுக்க, கங்கை கணவனை விட்டு நீங்கினாள்; அவ்வெட்டாவது மகனே இவ்வீடுமன் என அறிக. திருதராட்டிரன் பாண்டு இவர்கட்குத் தந்தையான விசித்திரவீரியனுக்குத் தமைய னாதலால், இவன் கௌரவ பாண்டவர்க்குப் பெரிய பாட்டனாவன். அன்பினாலும் உறவுரிமையாலும் உள்ள ஒற்றுமைநயந் தோன்ற, தம்பியின் மகன்மைந்தனை 'மகன் மைந்தன்' என்றே கூறினார். தருமபுத்திரன் அறநெறி சிறிதுந் தவறாதவ னாதலால், அவன்உறையும் நாட்டில் மழையும் விளைவும் உண்டென்றார்; தருமமுடையோர் தங்குமிடத்து மழைவளஞ் செழிப்பது, இயல்பு: "நல்லாரொருவருளரே லவர் பொருட்டா, லெல்லார்க்கும் பெய்யுமழை", "மழையுந், தவமிலாரில்வழியில்லை" - "நிலத்தியல்பு, வான முரைத்து விடும்" என்பன காண்க. நீர்வளம் நிலவளத்துக்குக் காரணமாதலால், அம்முறையே 'மழையுண்டு விளைவுண்டு' எனப்பட்டது. விளைவு-நெல்முதலிய தானியங்கள் விளைதல். 'அறன்காளையுறை நாடு உன் ஒற்றருணர்தற்கு வருமோ' என்றதில், நீ அறஞ்சிறிதுமில்லாதவனென்ற குறிப்புத் தொனிக்கும். திருமாலின் திருவடித்தீர்த்தமானது, வானத்திற்பாய்கையில் 'மந்தாகினி' என்றும், பூமியிற்பாய்கையில் 'கங்கை' என்றும், பாதாளத்திற்பாய்கையில் 'போகவதி' என்றும் பெயர்பெறும் என்ப. முன் -இடமுன். ஒற்றை - துளைக்கருவியாகிய ஒருவாத்தியம். இரு சங்கம்-இரட்டைச் சங்கங்க ளென்றுமாம்; இரண்டு பக்கத்திலும் இரண்டு சங்க மென்க. இனி போரைக்குறிக்கின்ற சங்கமும் வெற்றியைக்குறிக்கின்ற சங்கமும் ஆகிய இரண்டும் விரைந்துஊத என்று உரைப்பாருமுளர். அன்றி, ஒற்றையிருசங்கம்-வெற்றிச்சங்குமங்கலச்சங்கு கொடைச்சங்கு என்ற மூன்றுவகைச்சங்குகள் என்று உரைப்பர் ஒருசாரார். எதிர்த்து என்பது, விகுதி முதலியன கெட்டு 'எதிர்' என நின்றது; "வரிப்புனை பந்து" என்பதில் 'வரி' என்பது போல, தருமத்தினின்று தவறியவர்க்குத்தான் நடுவுநிலைமை சிறிதுந்தவறாமல் தக்க தண்டனை செய்து தருமத்தைக் காத்தலால், யமனுக்கு 'தருமன்' என்று பெயர்; அப்பெயர்ப்பொருளையே 'அறன்' என்று குறித்தார். இனி, மந்தாகினீ மைந்தன் மகன் - வீடுமனது மகனான திருதராட்டிரன், |