பக்கம் எண் :

106பாரதம்விராட பருவம்

      இதுமுதற் பதினான்கு கவிகள் - தென்புறத்து நிரைமீட்சி கூறுகின்றார்.
தான் அறியாதபடி திரிகர்த்தராஜன் வந்து பசுக்களைக் கவர்ந்தமையால்
சினந்து, பெருங்குரலுடன், தன் சதுரங்கசேனைகளைப் போர்க்குச்
சித்தஞ்செய்யுமாறு விராடராஜன் கூறினனென்க.  நிருமிக்க வொட்டாத பூமி -
(எவராலும் இங்ஙனம் பிற இடங்களில்) உண்டாக்கமுடியாத (வளங்களையுடைய)
நாடுஎன்றுமாம்.

     பருமிக்க-பருமை மிகுந்தவென்றுமாம்; வியங்கோள் வினைமுற்றாகக்
கொண்டு, மதயானைகளை அலங்கரிக்க வென்றலுமாம்; பருமம் -
யானைமேற்றவிசு: பருமித்தல்-தவிசிட்டு அலங்கரித்தல்.  பண்செய்தல்-
அலங்காரஞ் செய்தலுமாம்.  'ஆள்' என்ற சொல் உயர்திணையாயினும்,
யானை தேர் வாசி என்ற மூன்று அஃறிணைச்சொற்களோடு சேர்த்து
நிறுத்தப்பட்டதனால், மிகுதிபற்றி 'இன்ன' என்ற அஃறிணைமுடிபைக்
கொண்டது.  இனி, 'ஆள்' என்றது - காலாட்சேனையையுணர்த்து
வதெனக்கொண்டு அதனை அஃறிணையின்பாற்படுத்துதலு மொன்று.    (169)

11.-விராடன் தன்சேனையுடனேதிரிகர்த்தன்சேனையை
நெருங்குதல்.

ஒண்டூளிவானம்புதைக்கப்பல்லியசாலமொலிபட்டிடத்
திண்டூசியணியாகநிரைகொண்டவெஞ்சேனைசென்றெய்தினான்
ஞெண்டூரும்வயறோறும்வளைநித்திலஞ்சிந்திநிலவூரவே
வண்டூதமலருந்தடம்பொய்கைசூழ்மச்சவளநாடனே.

      (இ -ள்.) ஞெண்டு ஊரும் - (நீர்வளத்தால்) நண்டுகள் ஊர்ந்து
செல்லப்பெற்ற, வயல்தோறும் - கழனிகளிலெல்லாம், வளை - சங்குகள்,
நித்திலம் சிந்தி - முத்துக்களைப் பெற்றதனால், நிலஊரவே -
சந்திரகாந்திபோன்ற வெள்ளொளி பரவவே, (அதனால்), வண்டு ஊத-வண்டுகள்
வந்து ஊதும்படி, மலரும்-(அரும்புகள்) மலரப்பெற்ற, தட பொய்கை - பெரிய
தடாகங்கள், சூழ் - சூழ்ந்த, மச்சம் வளம் நாடன் - வளமுள்ள மச்சமென்னும்
நாட்டையுடையவனான விராடராஜன்,-ஒள் தூளி-(சேனைகள் செல்வதனால்
எழுப்பப்பட்ட) ஒள்ளிய [மிகுதியான] புழுதி, வானம் புதைக்க-ஆகாயத்தை
மறைக்கவும், பல் இயம் சாலம் ஒலி பட்டிட - பலவகைவாத்தியங்களின்
கூட்டம் ஒலிசெய்யவும், திண் தூசி அணி ஆக - வலியசேனை
அணிவகுக்கப்பட்டுச் செல்லவும், சென்று - போய், நிரைகொண்ட வெம்
சேனை - பசுக்களைக் கொண்டுபோன கொடிய திரிகர்த்தன் சேனையை,
[முறையே முன்] எய்தினான் - சந்தித்தான்;

     கொட்டுவனவும் ஊதுவனவும் எழுப்புவனவுமாகிய தோற்கருவி
துளைக்கருவி நரப்புக்கருவி கஞ்சக்கருவி யென்பன வெல்லாம் அடங்க,
'பல்லியசாலம்' என்றார்.  தூசி - முந்துற்றுப் பொருபடை; முன்னணிச்சேனை.
வயல்களிற் சங்குகளும் முத்துக்களும் வீசுகின்ற வெண்மையான காந்தியை
நிலா என்று மயங்கி ஆம்பல் முதலிய சில நீர்ப்பூக்கள் மலரு மென
மயக்கவணியாகக்கருத்துக்கொள்க.  சங்கு