ராஜனை,தோள் வடம் நெகிழ்ந்து - தோள்களைக்கட்டிய கயிற்றையவிழ்த்து, தேர்உம் ஒன்று அளித்து - ஒருதேரையுங்கொடுத்தருளி, செல்க என- '(உயிரோடு) போவாயாக' என்று சொல்லி, விடுத்தான் - விட்டிட்டான்; (எ-று.) விராடன் சூரியகுலத்துத்தோன்றியவனாதலால் 'அயோத்திமன்' எனப்பட்டான். பகைவர் பக்கலிலும் அறநெறி தவறாத தருமபுத்திரனது கருணையும், முனிவர் சொல்லைக் கேட்டு அதன்படியொழுகும் விராடனது நற்குணமும், இங்கு வெளியாம். திரிகர்த்தனை இங்ஙனம் விடுத்தது, தழிஞ்சியென்னும் புறப்பொருள் துறை; அது, வலியிழந்தவர்மேற் போர்க்குச் செல்லாமல் அவர்க்கு உதவிசெய்து தழுவுவது. சிங்கம் - வீரனுக்கு நடை வலிமை நோக்குத் தைரிய காம்பீரியங்களாலும், எளிதிற் பகையழிக்குந் திறத்தினாலும், தலைமையினாலும் உவமை. இங்கே 'சிங்கமன்னதிகத்தன்' என்றது, இகழ்ச்சி; எதிர்மறையிலக்கணை, அன்றி, தோல்வியுற்ற அவனை 'சிங்கமன்னவன்' என்றது - அவனை வென்றவனான வீமனது பல பராக்கிரமங்களின் மிக்க சிறப்புத் தானேவிளங்கக் கூறியதுமாம். அங்கம் - மதிலுறுப்புக்கள். (181) 23.-அன்றையிராத்திரிவிராடன் அங்கேயே யிருத்தல். போரணிப்படையொடுமவன்போனபின்றனது தேரணிப்பெருஞ்சேனையைரவிகுலதிலகன் பேரணிப்படவகுத்துமற்றியாரினும்பெரியோன் ஈரணிப்படைவருமெனக்கங்குலங்கிருந்தான். |
(இ -ள்.) அவன் - அத்திரிகர்த்தன், போர் அணி படையொடு உம்- போர்க்களத்துக்கு அலங்காரமான சேனையுடனே, போனபின்- போய்விட்டபின்பு, ரவி குல திலகன் - சூரியகுலத்துத் திலகம் போன்றவனாகிய விராடன், 'மற்று யாரின்உம் பெரியோன் - மற்றையெல்லாரினும் பெரியவனாகிய துரியோதனனது, ஈர் அணி படை - இரண்டாவது [வேறொரு] சீர் பெற்ற சேனை, வரும் - இங்குவருதல் கூடும்', என-என்று எண்ணி,-தனது- தன்னுடைய, தேர் அணி பெருஞ் சேனையை - தேர் முதலியவற்றையுடைய அழகிய பெரிய சேனையை, பேர் அணி பட வகுத்து - பெரிய (வியூகமாக) ஒழுங்காக வகைப்படுத்தி, கங்குல்-இராமுழுதும், அங்கு-அங்கேயே [தெற்குப் பக்கத்தில்], இருந்தான்-தங்கியிருந்தான்; (எ - று.) தோல்வியுற்ற சேனையை இங்கே 'போரணிப்படை' என்றது - இகழ்ச்சி; வீரமின்மை விளக்கிற்று. ரவிகுலதிலகன்-திலகம் - நெற்றிப்பொட்டு. அது நெற்றிக்கு அழகுசெய்வதுபோல, தான் பிறந்த சூரியகுலத்துக்குச் சிறப்புண்டாக்குபவனென்க. மற்று-இனியென்றுமாம்; அசையுமாம். ஈரணிப்படை - வினைத்தொகையாய், (பகைவரைப்) பிளக்கவல்ல சேனையுமாம்; ஈர்த்தல் - அரிதல், அறுத்தல், பிளத்தல். 'போரணிப்படை' என்ற தொடர் - போர் செய்தலைத் தனக்கு அலங்காரமாகக்கொண்ட சேனையென்றும், போர் |