செய்தற்பொருட்டு (முன்பு) அணிவகுத்துநின்ற சேனையென்றும் பொருள்படும். தேர் மற்றைப்படைகட்கும் உபலக்ஷணம். சிறுபான்மை வடசொற்களை அங்ஙனமே பிரயோகித்தலும் இயல்பாதலால், 'ரவிகுலதிலகன்' என்றே கூறினார்; (பிரயோகவிவேகநூலார் 'தண்டியாசிரியரும் சிந்தாமணியாரும் வடமொழியிற் பிறந்த வண்ணமே 'யுக்தமுமயுக்தமும்'"ராசமாபுரி" "ரவிகுலதிலகன்" என முறையே கூறுதல் காண்க' என்றும், 'நாலடியாரும் தண்டியாசிரியரும் சிந்தாமணியாரும் வடமொழியிற் பிறந்தவண்ணம் முறையே "யோசனையோர் கேட்பர்" "யுத்தமுமயுக்தமும்""ரவிகுலதிலகன்" எனத் தற்சமமாகக்கூறினாற்போல, யாமும், உருவபேதமென்னாமலே ரூபபேத மென்றாம்' என்றுங் கூறியவை நோக்கத்தக்கன.) (182) 24.-இதுவும், அடுத்த கவியும்- வடபுறத்து நிரைகவர்தல். கெட்டவெம்படைகெட்டமைசுயோதனன்கேளா முட்டவெண்டிசாமுகங்களும்பேரிகைமுழங்கத் தொட்டபைங்கடற்சூரியன்றோன்றுமுன்றோன்றி வட்டமாமதில்விராடனூர்வடதிசைவளைந்தான். | (இ -ள்.) (பின்பு),-சுயோதனன்-துரியோதனன்,-கெட்ட வெம்படை - மிகவுங் கொடிய அத்திரிகர்த்தசேனை, கெட்டமை - அழிந்து தோல்வியுற்று வந்த செய்தியை, கேளா-கேள்வியுற்று,-எண் திசாமுகங்கள்உம் முட்ட- எட்டுத்திக்குக்களி னெல்லைகளிலும் ஒலிசென்று தாக்கும்படி, பேரிகை முழங்க - போர்முரசங்கள் ஆரவாரிக்க,- தொட்ட பைங் கடல் - (சகரசக்கரவர்த்தியின் புதல்வர்) தோண்டிய பசிய கீழ்கடலிலே, சூரியன்-, தோன்று முன்- உதிப்பதற்குமுன்னே [பின்னிரவிலே], தோன்றி - புறப்பட்டு வந்து,-வட்டம் மா மதில் - வளைவான பெரிய மதிலையுடைய, விராடன் ஊர் - விராடனது நகரத்தை, வட(க்கு) திசை-வடக்குப் பக்கத்தில், வளைந்தான் - (சேனையுடனே நன்கு) முற்றுகைசெய்தான். (எ - று.) திரிகர்த்தன் தெற்குத்திசை ஆநிரை கவர முயன்ற அன்றைத்தினமே துரியோதனன் விராடநகரத்தில் வடதிசையில் முற்றுகை செய்தானென்க. பசுமை, கருமை, நீலம் இவற்றில் ஒன்றற்கு ஒன்று உள்ள சிறு வேறுபாட்டைப் பெரிதெனக் கெள்ளாமல் அபேதமாக்கூறுதல் கவிசமயமாதலால், கருங்கடலை 'பைங்கடல்' என்றார்; பசுமை-குளிர்ச்சியுமாம். 'தொட்டகடல்'என்றதன் விவரம்:-சூரியகுலத்துச் சகரமகாராசன் அசுவமேதயாகஞ் செய்கின்றபொழுது பூமிப்பிரதக்ஷிணத்தின் பொருட்டுச் செலுத்திய குதிரையை, பொறாமைகொண்ட தேவேந்திரன் மாயையால் ஒளித்துக்கொண்டுசென்று, பாதாளலோகத்தில் தவஞ்செய்துகொண்டிருந்த கபிலமுனிவர்பின்னே கட்டிவைக்க அவ்வேள்விக்குதிரையை நாடிச்சென்ற சகரபுத்திரர் அறுபதினாயிரம்பேர் |