வந்து) அஞ்சியோடிய குமாரனும், இ தேர் விரைந்து ஊர்பவன் - (பேடியின் செயலால் தேறி) இந்தத்தேரை விரைவாய்ச் செலுத்துஞ் சாரதியானான்,' என்றும்-, 'பேடி-, நாம் முதல் ஐயுறும் பெருந்தகை - நாம் முதலிற் சந்தேகிக்கத்தக்க பெருமைக்குணங்களையுடைய அருச்சுனனாம்,' என்றும்-, நாடினார் - ஆலோசிப்பவரானார்கள்; (எ - று.) ஓடினவன் பேடியினால் தேற்றப்பட்டுத் தேரூரும் பாகனாக, பேடி இப்போது ரதிகனாக ஆய்விட்டதனால், இப்பேடி அருச்சுனனாக இருக்கவேண்டு மென்ற ஓராலோசனை துரோணாசாரியர்முதலியோருக்கு உண்டாயிற்றென்பதாம். ஓடினானும், உம்மை - இழிவுசிறப்பு. ஐயுறு - ஐயமுறு: விகாரம்; காமுறு, ஏமுறு என்பனபோல. பெருந்தகை - அன்மொழித்தொகை: தகை - தகுதி, சற்குணம். நந்தியாவர்த்தம் - ஒரு பூஞ்செடி; இதனை, இக்காலத்து நஞ்சாவட்டையென்பர்: இம்மாலை, துரியோதனனுக்கு உரிய அடையாளப்பூமாலையாம். துரோணன் - பரத்துவாசமுனிவனது குமாரன்; கிருபாசாரியனுடன் பிறந்தவளான கிருபியின் கணவன்; அசுவத்தாமனது தந்தை; ஸகலசாஸ்திரங்களையும் தன் பிதாவினிடம் கற்று, படைத்தொழிலைப் பரசுராமனிடத்து ஏழுநாளிற்பயின்றவன்: துரியோனாதியர் நூற்றுவர்க்கும் பாண்டவரைவர்க்கும் அஸ்திரசஸ்திரங்களைக் கற்பித்த ஆசிரியன்: வைதிகவிரதாநுட்டானஞ் செய்து கொண்டிருக்கையில் தேவர்களாலேவியனுப்பப்பட்ட மேனகையின் கட்டழகைக்கண்டு காதல்கொண்ட பரத்துவாசமுனிவனது விருப்பத்தால் ஒரு துரோணகும்பத்திற் பிறந்தமைபற்றி, இவனுக்குத் துரோணனென்று பெயர்; த்ரோணகும்பம் - பதக்களவுகொண்ட பாத்திரம்; துரோணம் - பதக்கு, இரண்டுகுறுணி. இனி, துரோணம் என்று வில்லுக்குப் பெயரிருத்தலால், துரோணனென்பது - வில்வன்மைபற்றிவந்த பெயருமாம். இவன், அங்கி வேசமுனிவன் பக்கலிலும் படைகள் தேர்ந்தான். ஏ - உயர்வு சிறப்பு. (206) 48.-பிருகந்நளை கையில்வில்லேந்தி, உத்தரனை அஞ்சாது தேர் செலுத்தச் சொல்லுதல். பேடியன்றுதன்பெண்மையையாண்மையாய்ப்பிறர்கொண் டாடவந்தவெஞ்சாபமுந்தொடிக்கையிலாக்கிக் கோடியம்புகளோரொருதொடையினிற்கோத்து வீடுவிப்பனீயஞ்சிடாவிடுகதேரென்றான். |
(இ -ள்.) அன்று - அப்பொழுது, பேடி - பேடிவடிவமமைந்த அருச்சுனன், பிறர் - அயலார் [பகைவர்], தன் பெண்மையை - தனது மிக்கிருக்கும் பெண்தன்மையை, ஆண்மைஆய் கொண்டாட - ஆண்தன்மையாக மெச்சும்படி, அந்த வெம்சாபம் உம் - அந்தக்கொடிய வில்லையும், தொடி கையில் ஆக்கி - வளையலணிந்த தன் |