53.-கர்ணன் அலட்சியமாகக் கூறுதல். தேருமங்கொருதேர்தனித் தேரின்மேனின்று வீரவெஞ்சிலைவளைத்தகை வீரனும்பேடி யாருநெஞ்சழிந்தஞ்சுவ தென்கொலென்றிசைத்தான் சூரன்மாமகனாகிய சூரரிற்சூரன். |
(இ - ள்.) சூரன் மா மகன் ஆகிய - சூரியனது சிறந்த குமாரனாகிய, சூரரில் சூரன் - வீரர்களிற்சிறந்த வீரனாகிய கர்ணன், 'அங்கு - அவ்விடத்தில் [எதிர்ப்பக்கத்தில்] தேரும்-, ஒரு தேர் - ஒற்றைத் தேராகும்; தனி தேரின்மேல் நின்று - அந்த ஒரு தேரின்மேற் பொருந்தி, வீர(ர்) வெம் சிலை வளைத்த கை-வீரர்களுக்குரிய கொடிய வில்லை வளைத்துப்பிடித்த கையையுடைய, வீரன்உம் - வீரனொருவனும், பேடி - ஆண்மையில்லாத பேடியாம்; (இங்ஙனமாகவும்), யாரும்-பேர்பெற்ற நீங்களெல்லாரும், நெஞ்சு அழிந்து- மனந்தளர்ந்து, அஞ்சுவது - பயப்படுவது, என்-என்ன காரணத்தால்?' என்று -, இசைத்தான் - சொன்னான்; (எ - று.) 'சூரன்' என்கிற சொல் இரண்டும் - முறையே ஸூரன் ஸூரன் என்ற வடமொழிகளின் திரிபுகள். "ஒன்று தேரினாலொருவன் கூற்றமே, என்று கூறினு மொருவனென்செயும், இன்று கோடுநரமெழுகென்றேகினார்" என்ற சீவகசிந்தாமணி, இங்கு ஒப்புநோக்கத்தக்கது. ஆடவர்க்குரிய வில்தொழிலை மேற்கொண்டதனால், 'வீரனும் பேடி' என ஆண்பாலாகக் கூறினான். கர்ணன் அகம்பாவமுடையனாதலால், 'விதுரன் ஒருகால் எதிர்த்தவன் அருச்சுனனாயிருக்கலாமோ?' என்ற கருத்துடன் கூறியதை யவமதித்து, அவ்விதுரன் முதலானோர் அஞ்சுவதை இழித்தற்பொருட்டு, பேடியை 'வீரன்' என்றான். வீரனும் பேடி என்றதனால், அருச்சுனனோ என்று ஐயுறுதற்கும் இடனில்லையென்பதையும் காட்டியவாறு. கொல்-அசைநிலை. 'யாரும்' என்றது-இங்கு முன்னிலைப்படர்க்கை. ஏந்தியவனது வீரத்தை வில்லின்மே லேற்றி 'வீரச்சிலை' என்றதாகவுங் கொள்ளலாம்; 'சினவாள்' என்றாற் போல. (212) 54.-துரியோதனனது கட்டளை. கொண்டகோநிரைகோவலர் கொண்டுமுன்போகத் தண்டுநிற்கெனத்தம்பிய ரனைவருந்தானும் திண்டிறற்பெரும்பேடியைத் தேர்மிசைக்கண்டு மிண்டுவீரெனக்கூறியே சுயோதனன்மீண்டான். | (இ - ள்.) (அதுகேட்டு), சுயோதனன் - துரியோதனன், தானும்-, 'கொண்ட கோ நிரை-கவர்ந்துகொண்டுவந்த பசுக்கூட்டங்களை, கோவலர் - (நமது) இடையர்கள், கொண்டு - ஓட்டிக்கொண்டு, முன் போக - முன்னே போவாராக: தண்டு - (நம்) சேனையானது, நிற்க - (அவ்விடையர்க்குத்) துணை நிற்பதாக,' என - என்று கட்டளையிட்டு, 'தம்பியர் அனைவர்உம் - தம்பிமாரெல்லீரும், திண் திறல் பெரும் |