அருச்சுனனெய்த அம்புகளினால், பகைவீரர்களிற் பெரும்பாலார் உடலுறுப்புக்கள் துணிபடக் கவசம்பிளவுபட இறந்தொழிந்தனர்; இறவாமல் எஞ்சிநின்ற வீரர்களிற் புண்படாதவ ரெவருமில்லை யென்பதாம். இரண்டுகால்களையும் மண்டலாகாரமாக வைத்துக் கொண்டு நிற்கின்ற நிலை, மண்டலநிலை யெனப்படும்; "இருகால் மண்டலித் திடுதல் மண்டல நிலை" என்பது, பிங்கலந்தை. 'பிளந்து' என்ற செயவெனெச்சம், காரணப்பொருளது. கவசம் பிளந்தபின் உடம்பில் அம்புருவுதல் எளிதாதலால், பட்டொழிதலுக்குக் கவசம் பிளத்தல் காரணமாம். (226) 68.-அருச்சுனன் துரியோதனதுதேர்க்குதிரைகளையும் பாகனையும் அழித்து அவனைப்பரிகசித்தல். வேகம்வற்றியநதியன விதநடைப்புரவி பாகவற்றினைத்தலையற மலைந்துபாழ்படுத்தி மாகவற்றினிற்பொய்த்தசூ தாடியவஞ்ச நாகவற்றியபுன்மொழி நிருபனைநகைத்தான். |
(இ -ள்.) (அருச்சுனன்),- வேகம் வற்றிய நதி அன - நீர்ப்பெருக்கில் வேகம் குறைந்த ஆறு (தணிந்து ஓடுவது) போன்ற [மந்தமான வேகமுள்ள], நடை விதம் - கதியின் தன்மையையுடைய, புரவி - குதிரைகளும், பாகு - சாரதியும், அவற்றினை - ஆகிய அவைகளை, தலை அற - தலை துணிபடும்படி, மலைந்து - போர்செய்து, பாழ்படுத்தி - அழியச்செய்து,- மா கவற்றினில் - பெரிய சூதாடுகருவியால், பொய்த்த சூது ஆடிய - பொய்க்கு இடமான சூதாட்டத்தை (த் தன்மாமனைக்கொண்டு) ஆடி (த் தருமபுத்திரனை) வென்ற, வஞ்சம் - வஞ்சனையையுடையவனும், நா கவற்றிய புல் மொழி - நாவினால் (அப்பாண்டவர்கட்கு) மனவருத்தமுண்டாம்படி கூறிய இழிசொற்களை யுடையவனுமான, நிருபனை - அத்துரியோதனராசனை நோக்கி, நகைத்தான் - சிரித்தான்; (எ - று.) அருச்சுனன் செய்யும் போர்த்திறத்துக்கு அஞ்சித் துரியோதனன் குதிரைகள் வலிகுறைந்து நடைதளர்ந்ததனால், அவற்றிற்கு வற்றிய நதி உவமை கூறப்பட்டது. இனி, வேக என்று பாடங்கொண்டு - (வெயில்) காய்தலால் எனினுமாம். 'பெரும்போர் செய்து அடையவேண்டிய வெற்றியை எளிதில் அடையச்செய்தலால், 'மா கவறு' எனப்பட்டது; இகழ்ச்சியுமாம். புன் மொழி - திரௌபதியைக் கொணர்ந்து துகிலுரியச் சொன்னது முதலியன. இங்கு, நகை - இகழ்ச்சிகாரணமாகப் பிறந்தது. இச்செய்யுளில் திரிபு என்னுஞ் சொல்லணி காண்க. (227) 69.-தப்பியோடத்தொடங்கியதுரியோதனனை அருச்சுனன் மறித்துச் சில கூறத் தொடங்குதல். பாகும் வாசியு மமைந்ததோர்தேர்மிசை பாய்ந்து மாகு சூழவுந் தப்பிய வரிநிறமாபோல் |
|