பக்கம் எண் :

156பாரதம்விராட பருவம்

சொல்லியிரவாதமுன்னே கைம்மாறு கருதாது கொடுக்குமியல்பினது: இதனை
உவமைகூறியது, கர்ணனது தானச்சிறப்பை விளக்கும். கன்னன்-கர்ணன் என்ற
வடசொல்லின் விகாரம்; இப்பெயர்-கர்ண குண்டலங்களோடு பிறந்தமை
பற்றியது: காதின்வழியே பிறந்ததனால் வந்த பெயரென்றுங் கூறுவர்; கர்ணம்-
காது.                                               (234)

76. கர்ணன் அர்ச்சுனனைப் போர்க்கு அழைத்தல்.

மின்னுடன்மின்மினி வெகுளுமாறுபோல்
தன்னுடனிகரிலாத் தடக்கைவண்மையான்
மன்னுடனிகல்வது வார்த்தையன்றினி
என்னுடன்மலைதிநீ யென்று கூறினான்.

     (இ-ள்.) (அவர்களில்), தன்னுடன் நிகர் இலா - தனக்கு ஒப்புடை
பெறாத, தட கை வண்மையான் - பெரிய இரண்டுகைகளாலும் கொடுக்குங்
கொடையையுடையவனான கர்ணன், -மின்னுடன் மின்மினி வெகுளும் ஆறு
போல் - மின்னலுடனே மின்மினிப்பூச்சி கோபித்துப்பகைத்து (ஒளியாமல்)
எதிர்த்தால் அதுபோல, - (அருச்சுனனை நோக்கி), 'நீ-, மன்னுடன்
இகல்வது - துரியோதனராசனுடனே எதிர்த்துப் பேசுவது, வார்த்தை அன்று
- காரியமன்று; இனி-, என்னுடன் மலைதி - என்னோடு போர்செய்வாய்,'
என்று கூறினான் - என்று வீரவாதஞ்சொல்லிப் போர்க்கு அழைத்தான்;

     மின்னுடன் மின்மினி வெகுளதலாவது-உன்னிலும் நான்
மிக்கவொளியுடையே னென்று மாறுபடுதல்; இது, இல்பொருளுவமை.
மின்னல்-அருச்சுனனுக்கும், மின்மினி-கர்ணனுக்கும் கவி கூறிய உவமம்.
இதனால், வீரத்தில் அருச்சுனனது மிக்கவுயர்வும், கர்ணனது மிக்கதாழ்வும்
விளங்கும். இனி, 'மின்னுடன் மின்மினி வெகுளுமாறுபோல்' என்பதனை,
துரியோதனனோடு அருச்சுனன் எதிர்த்ததற்குக் கர்ணன்கூறிய உவமையாகக்
கொண்டு உரைப்பாரும்உளர். மின்மினி-இருளில் மின்னுவதொரு பறக்கும்
புழு; இடைவிட்டு ஒளிசெய்வதென்று பொருள்படுங் காரணக்குறி.    (235)

77. - அருச்சுனன் கர்ணனை நோக்கித் தேர்செலுத்தல்.

கரக்கவுணமதம்பொழி காய்கறிற்றைவிட்டு
உரக்கொடுவரியின்மே லோடும்யாளிபோல்
நிரக்குமநதிருபனு நிற்கவந்துபோர்
இரக்குமக்கன்னன்மே லிரதமேவினான்.

     (இ-ள்.) கரம்-(தன்) துதிக்கையினின்றும், கவுள் - கன்னத்தினின்றும்,
மதம் பொழி - மதங்களைச் சொரிகின்ற, காய் களிற்றை -
கோபிக்குமிய்லபுள்ளதொரு யானையின்மேற் பாய்வதை, விட்டு - ஒழித்து,
உரம் கொடுவரியின்மேல் ஓடும் - வலிமையையுடையதொரு புலியின்மேல்
ஓடிப்பாய்கின்ற, யாளி போல்-யாளியென்னும் மிருகம் போல, - (அருச்சுனன்),
- நிரக்கும் அ நிருபன்உம் நிற்க-பொருந்திய அந்தத் துரியோதனராசனும்
நின்று கொண்டிருக்க (அவனைவிட்டு),