பக்கம் எண் :

158பாரதம்விராட பருவம்

79.-இருவரும் நெடும்பொழுதுசமமாகப் பொருதல்.

இருவருமெதிரெதிரேவும்வாளியால்
வெருவருமிருளுறவிசும்புதூர்த்தனர்
பொருவருமமர்நெடும்போதுதாக்கியும்
ஒருவருமிளைத்திலரொத்தவாண்மையார்.

      (இ -ள்.) ஒத்த ஆண்மையார் - சரிசமமான ஆண்மையையுடையரான,
இருவர்உம் - (கர்ணன் அர்ச்சுனன் என்ற இந்த) இரண்டுபேரும், எதிர் எதிர்
ஏவும் - எதிர்க்கெதிரே [தம்மில் ஒருவரைக்குறித்து ஒருவர்] செலுத்திய,
வாளியால் - அம்புகளினால்,- வெருவரும் இருள் உற - அஞ்சத்தக்க இருள்
உண்டாக, விசும்புதூர்த்தனர் - ஆகாயத்தை மறைத்தனர்; (இவ்வாறு), பொருவு
அரும் அமர் - ஒப்பில்லாத யுத்தத்தை, நெடும் போது தாக்கிஉம் -
வெகுநேரம் உக்கிரமாகச்செய்தும், ஒருவர்உம் இளைத்திலர் - (இவ்விருவரில்)
ஒருவராயினும் சிறிதும் வலிகுறைந்தன ரில்லை; (எ - று.)

     நிரைநிரையாகத்தொடுத்த மிகப்பலவாகிய அம்புகள் அடர்ந்து சூரியனை
மறைத்தலால் இருள் உண்டாயிற் றென்க.                         (238)

80.-கர்ணன் தேர்முதலியனஅழிந்து ஓடுதல்.

மற்றொருதொடையினிற்சுவேதவாகனன்
முற்றொருகணத்திடைமூன்றுகோல்விட
இற்றொருகணத்திடையிவுளிபாகுதேர்
அற்றொருவினனடலாண்மையங்கர்கோன்.

      (இ -ள்.) (இங்ஙனம் பொருகையில்), சுவேத வாகனன் -
வெண்ணிறமானகுதிரைகளையுடையவனாகிய அருச்சுனன், மற்று - பின்பு, ஒரு
தொடையினில்- ஒரு பிரயோகத்தில், முற்று ஒரு கணத்திடை - ஒரு
க்ஷணகாலம்முடிவதற்குள்ளே, மூன்று கோல் விட - மூன்று அம்புகளை
ஒருசேரத்தொடுக்க, (அவற்றால்)-இற்று ஒரு கணத்திடை - இத்தன்மைத்தான
அந்த க்ஷணமொன்றிலே, அடல் ஆண்மை அங்கர் கோன் - வலிமையையும்
வீரத்தன்மையையுமுடைய அங்கதேசத்தார்க்கரசனான கர்ணன், இவுளி பாகு
தேர் அற்று - குதிரைகளும் சாரதியும் தேரும் அழிந்து, ஒருவினன் -
(போரினின்று) நீங்கிச்சென்றான்; (எ - று.)

     அங்கர்கோன் இவுளிபாகுதேர் அற்று ஒருவினன் - சினைவினை,
முதல்வினைகொண்டது.  வெண்ணிறக் குதிரைகள் அக்கினியீந்தவையென்று
முன்னரே கூறப்பட்டன.  மற்று - இடைச்சொல்.  ஒரு தொடை -
தொடுக்குந்தரமொன்று.  முற்று கணம் - வினைத்தொகை.  கணம் - ஒருகால
நுட்பம்.  மதனது அங்கம் [சரீரம்] விழுந்த இடம், அக்காரணத்தால்
அங்கதேசமென்று பெயர்பெற்றது.                               (239)