ஒன்றுந்தெரியாதிருந்த எனக்கு 'இவ்வருச்சுனனல்லாது இவ்வுலகில் வில்முதலியபடைக்கலங்களின் திறம்படைத்தோர் வேறு இல்லை' என்று இவ்வுலகத்தார் மதிக்கும்படி அப்படைக்கலக் கல்விகளைப் பழுதறக்கற்பித்துக்கொடுத்தவன் நீ யென்றால், உனக்கு மாறாக நடப்பது ஐம்பெரும்பாதகங்களிலொன்றாகிய குருத்துரோகமன்றோ என்றன னென்பதாம். பஞ்சமகாபாதகங்கள்-கொலை, பொய், களவு, கட்குடித்தல், குருத்துரோகம் என்பன; சிறிதுவேறுபடக்கூறுதலு முண்டு. 'யாதுமொன்று' என்பது, 'யாதொன்றும்' என உம்மை பிரித்துக் கூட்டப்பட்டது. இலை - தொகுத்தல். இவனலாதிலையென்று இந்த மேதினி மதிக்குமாறு - "கலையின தகலமும் காட்சிக்கின்பமும், சிலையினதகலமும் வீணைச்செல்வமும், மலையினினகலியமார்பனல்லதிவ், வுலகினிலிலையென வொருவனாயினான்" என்பவைமுதலியன காண்க. தனது பணிவும் குருபக்தியும்தோன்ற, 'உனக்குப் பிழைப்பது' என்னாது 'உன்பதயுகம் பிழைப்பது' என்றனன். பூர்வத்தில் திருமாலாற் கொல்லப்பட்ட மதுகைடபரென்னும் அசுரர்களது மேதஸ்ஸினால் [உடற்கொழுப்பினால்] நனைந்தமைபற்றி, பூமிக்கு 'மேதிநீ' என்று பெயர்: அவ்வடசொல், மேதினியெனவிகாரப்பட்டது: அது - இங்கு இடவாகுபெயராய், அதிலுள்ளாரைக் குறித்தது. (247) 89. | மன்னொடுசூழநின்றமாசுணமுயர்த்தகோவை மின்னொடுமுருமேறென்னவெகுண்டமர்புரிவதல்லால் நின்னொடுங்கிருபனோடுநின்மகனோடுமுந்தை தன்னொடும்புரியேன்வெம்போர் தக்கதோசரதம்பாவம். |
(இ -ள்.) மன்னொடு சூழ நின்ற-(பல) அரசர்களாற் சூழப்பட்டு நிற்கின்ற, மாசுணம் உயர்த்த கோவை - பாம்புக்கொடியை உயர நாட்டியுள்ள துரியோதனராசனை, மின்னொடுஉம் உரும் ஏறு என்ன வெகுண்டு - மின்னலுடனே தோன்றுகின்ற பேரிடிபோலக் கோபித்து, அமர்புரிவது அல்லால் - (அவனுடன்) போர்செய்தலல்லாமல்,- நின்னொடுஉம் - உன்னுடனும், கிருபனோடுஉம் - கிருபாசாரியனுடனும், நின் மகனோடுஉம் - உனது குமாரனாகிய அசுவத்தாமனுடனும், முந்தைதன்னொடுஉம் - பாட்டனாகிய பீஷ்மருடனும், வெம்போர்புரியேன் - கொடிய யுத்தத்தைச் செய்யமாட்டேன்; தக்கதுஓ - (உங்களுடன் யான் போர்செய்வது) தகுதியுடையதாகுமோ? [ஆகாது]: சரதம் பாவம் - (அது) நிச்சயமாகப் பாவமேயாகும்; (எ - று.) துரோணனும் கிருபனும் ஆசிரியர்களாதலாலும், அசுவத்தாமா ஆசாரியபுத்திர னாதலாலும், பீஷ்மன் பிதாமகனாதலாலும், இவர்களோடு போர் புரியேனென்றான். குருவைப்போலவே குருபுத்திரனையும் நன்குமதிக்கவேண்டுமென்பது நூற்கொள்கையாத லுணர்க. மன்னொடுஎன்ற இடத்திலுள்ள 'ஒடு' என்ற மூன்றனுருபு கருத்தாப்பொருளில் வந்தது. 'மாசுணம்' என்ற பெரும்பாம்பின்பெயர், அதன் |