பக்கம் எண் :

நிரை மீட்சிச் சருக்கம் 177

பிரதிமைகளையலங்கரித்தற்குப் பலவகைப் பட்டாடைகள் கொணர்ந்துதரும்படி
வேண்டின ளாதலால், உத்தரை வண்டற்பாவைக்கு உடுத்துதற்கென்று
தூசுகளைக் கவர்ந்தான்.  'அம்ருத கிரணன்' என்று ஒருபெயர்பெறும்படி
சந்திரனது கிரணங்களெல்லாம் அமிருதமயமானவை யாதலால், 'திங்களமுது'
எனப்பட்டது. பொலிவு இழத்தலை விளக்குதற்கு, 'மயிர்கொய்தென்ன' என்று
உவமைகூறினார்; மயிர்கொய்தல், அவமானப்படுத்துதற் குறிப்புமாம்:
தூசுபறித்தலும் அப்படியே. 'இத்தரையிடங்கொளாமல்' என்றதனால்
பகைவர்களின் மிகுதி கூறியவாறாம்.                              (261)

103.-மயங்கி விழுந்தவர்கள் நெடும்பொழுது கழித்துத்
தெளிந்தெழுந்து அருச்சுனனது வீரத்தைமெச்சி இரதம்
முதலியவற்றிலேறிக்கொண்டு ஊர்க்குத் திரும்புதல்.

விழுந்தவர்நெடும்போதாகமெய்யுணர்வெய்திமெல்ல
அழுந்தியபகழியோடுமரிபடுகவசத்தோடும்
எழுந்துதம்மிரதம்யானையிவுளியினேறியேறித்   
தொழுந்தகுதெய்வமன்னசூரனைத்துதித்துமீண்டார்.

      (இ -ள்.) விழுந்தவர் - (அவ்வாறு மோகநாஸ்திரத்தால் மயங்கி)
விழுந்துகிடந்த பகைவரனைவரும், நெடும் போது ஆக - வெகுநேரங்கழிந்த
பின்பு, மெய் உணர்வு எய்தி - உண்மையான அறிவு உண்டாகப்பெற்று
[மயக்கந்தெளிந்து], அழுந்திய பகழியோடுஉம் - (உடம்பில்)
தைத்துக்கிடக்கின்ற அம்புகளுடனும், அரிபடு கவசத்தோடுஉம் -
பலதுளைகளையடைந்த கவசத்துடனும், மெல்ல எழுந்து - மெதுவாக எழுந்து,
தம் இரதம் யானை இவுளியின் ஏறி ஏறி - தம் தமது தேர் யானை
குதிரைகளின்மேல் ஏறிக்கொண்டு, தொழும் தகு தெய்வம் அன்ன சூரனை -
(யாவரும்) வணங்கத் தக்க கடவுளைப் போன்ற மகாவீரனாகிய அருச்சுனனை,
துதித்து - மெச்சிக் கொண்டே, மீண்டார் - திரும்பி (த் தமது ஊர்க்கு)ச்
சென்றார்கள்; (எ - று.)

     பிறர்செய்தற்கரிய செயல்களைத் தான் எளிதிற் செய்து முடிக்குந்
திறத்திற் கடவுள்போன்றவ னென்பார், 'தொழுந்தகு தெய்வமன்னசூரன்'
என்றார்.  அவனை இவர்கள் துதித்தது, தம்மை, உயிரோடுவிட்ட உபகாரத்தை
நோக்கி யென்க.  மெய்உணர்வுஎய்தி-உடம்பில் உணர்வு வந்து கூடப்பெற்று
என்றுமாம்.  'பகழியோடும்', 'கவசத்தோடும்' என்ற இடங்களில், 'ஓடு' என்ற
மூன்றனுருபு - அடைமொழிப்பொருளது.  அரிபடுதல் - துளைக்கப்படுதல்.
'ஏறி ஏறி' என்ற அடுக்கு - பன்மைப்பொருளது.                                      (262)

104.-அருச்சுனன் துரியோதனனை மகுடபங்கஞ்செய்தல்.

கொடிமதிற்பாகைவேந்தன்கொங்கர்கோன்புரவிக்காலால்
வடதிசையரசர்தங்கண்மாமணிமகுடம்போல
அடலுடைவிசயனொற்றை யம்பினான்மீண்டுஞ்சென்று
படவரவுயர்த்தகோவைப்பண்ணினான்மகுடபங்கம்.