பக்கம் எண் :

நிரை மீட்சிச் சருக்கம் 179

அழிந்து -சூதாட்டத்தில் தோற்று, அன்று - அக்காலத்தில், நின் முன் -
உனது முன்னிலையிலே, மன் அவைதன்னின் - இராஜசபையில், சொல்லிய -
வரையறுத்துச் சொல்லி யுடன்பட்ட, காலம் - அஜ்ஞாதவாசஞ் செய்யவேண்டிய
ஒரு வருஷகாலம், செல்லாமுன் - முடியக் கழிவதற்கு முன்னமே, தோற்றம்
செய்தார் - வெளிப்பட்டுத் தோன்றிவிட்டார்கள்; (ஆதலால், முன்னைய
ஏற்பாட்டின்படி), இன்னம் - மறுபடியும், புல்லிய கானின் போக - இழிவான
காட்டிற்குச் செல்லும்படி, நீ புகறி - நீ (அப்பாண்டவர்களை நோக்கிச்)
சொல்வாயாக,' என்று சொல்ல-, வீடுமன் - பீஷ்மன், மீண்டும் சொல்வான் -
(அதற்குப்) பிரதியுத்தரஞ்சொல்பவனானான்; (எ - று.) - அதனை, அடுத்த
கவியிற் காண்க.

      வல் -சூதாடுகருவி; அதுகொண்டு ஆடும் ஆட்டத்துக்கு இங்கு
ஆகுபெயர்.  அவை = ஸபா.  கார்முகம் கைத்தலத் திருப்பப்
போர்முகத்துப்புறந்தந்து போனவனை இங்கு 'வெல்படைவேந்தன்' என்றது,
இகழ்ச்சிக்குறிப்பாகியஎதிர்மறையிலக்கணை:  இனி, வெல் படை என்ற
வினைத்தொகையைச் செயப்பாட்டுவினைப்பொருளில் வந்த செய்வினை
யென்றுகொண்டு, (அருச்சுனனால்) வெல்லப்பட்ட சேனையையுடைய
துரியோதனராசனென்று உரைத்தலுமொன்று.

106.-அஞ்ஞாதவாசம் பூர்ணமாய்விட்ட தென்றுவீடுமன்
விடையளித்தல்.

செந்நெலேகன்னல்காட்டச்சேர்ந்தயற்செறுவினின்ற
கன்னலேகமுகுகாட்டுங்கங்கைநீர்நாடகேண்மோ
இன்னலேயுழந்தோர்காலமிந்துவினியக்கந்தன்னான்  
நென்னலேசென்றதென்றானெஞ்சினிலழுக்கிலாதான்.

      (இ -ள்.) செந்நெல்ஏ கன்னல் காட்ட - செந்நெய்பயிர்கள் தாம்
கரும்புகள்போல வளர்ந்து தோன்றாநிற்க, அயல் செறுவில் சேர்ந்து நின்ற
கன்னல் ஏ கமுகு காட்டும் - பக்கத்துநிலங்களிற் பொருந்தியிருக்கின்ற
கரும்புகள் தாம் பாக்குமரங்கள்போல வளர்ந்து காணப்படுகின்ற, கங்கைநீர்
நாட - கங்காநதியின் நீர் பாயப்பெற்ற குருநாட்டுக்குத் தலைவனே! கேண்மோ
- (நான் சொல்வதை நீ நன்கு) கேட்பாயாக: இன்னல்ஏ உழந்தோர் காலம் -
(இளமை தொடங்கித்) துன்பங்களையே யனுபவித்துவருந்தியவர்களான
பாண்டவர்கள் (மறைந்து வசிக்க வேண்டிய) ஒருவருஷகாலமானது, இந்துவின்
இயக்கந்தன்னால் - சந்திரனது ஸஞ்சாரத்தால் (சாந்திரமானபக்ஷரீதியாய்),
நென்னலே சென்றது - நேற்றோடே கழிந்துவிட்டது', என்றான் - என்று
(துரியோதனனைநோக்கிச்) சொல்லினான்: (யாவனெனில்),-நெஞ்சினில் அழுக்கு
இலாதான் - மனத்திற் களங்கஞ் சிறிதுமில்லாதவனான பீஷ்மன்; (எ - று.)

     இவ்வாறு கூறியது, திருவேங்கடமலைக்கு வடக்கிலுள்ளார்க்குச்
சௌரமான பக்ஷத்தினும் சாந்திரமானபக்ஷம் சிறந்ததாதலின்; சந்திரகுலத்தரசர்
சாந்திரமான பக்ஷரீதியை அநுசரித்தற்குரிய ரென்பது