(இ -ள்.) இங்கு - இவ்விடத்தில் [நகர்ப்புறச்சோலையில்], இவன் - இவ்வருச்சுனன், இ ஆறு உய்ப்ப - இவ்விதமாக (ச் சொல்லித்) தூதரையனுப்ப,- (அதற்குள்),-முன் பகல் - (அதற்கு) முந்தின நாளின் பகலில், தென் திசை - (தனது நகர்க்குத்) தென்புறத்தில், ஏகி - புறப்பட்டுச் சென்று, பூசல் - (அங்குநடந்த) போரில், வென்ற - (திரிகர்த்தராசனை) வென்று நிரைமீட்ட, வெம்கழல் விராடன் தான்உம்-(பகைவர்க்கு) அச்சந்தருகின்ற வீரக்கழலையுடைய விராடராஜனும், ஆங்கண் - அவ்விடத்திலே, கங்குலில் - அன்றை யிராத்திரிமுழுவதும், சேனையோடுஉம் - (தனது) சேனையுடனே, கண்படை இன்றி வைகி - தூங்குதலில்லாமல் தங்கியிருந்து, (மறுநாள்), செம் கதிர் எழுந்த பின்னர் - சிவந்தகிரணங்களையுடைய சூரியன் உதித்த பின்பு, மீண்டு - திரும்பி, தன் நகரி புக்கான் - தனது நகரத்துக்கு வந்து சேர்ந்தான்; (எ - று.) 'உய்ப்ப' என்ற செயவெனெச்சத்தை, மேல் 115-ஆங் கவியிலுள்ள 'தூதர்போய்த் தொழுதுசொன்னார்' என்பதனோடு கூட்டுக. இடையிலுள்ளது, அச்சமயத்திற்குள் நிகழ்ந்திருந்த செய்தியைக் கூறியது, கீழ் 23- ஆஞ் செய்யுளில் 'படைவருமெனக் கங்குலங்கிருந்தான்' என்றதனோடு தொடர்ச்சிப்பட நிகழ்ந்தசெய்தி கூறுகிறார்: அதனால், கங்குலிற் கண்படையில்லாதிருந்ததன் காரணம் விளங்கும். கண்படை - கண்மூடியுறங்குதல். செங்கதிர் - பண்புத்தொகைப்புறத்துப்பிறந்த அன்மொழித்தொகை; அடையடுத்த சினையாகுபெயரெனினும் அமையும். (271) 113.-மகன்போர்க்குச்சென்ற செய்தி கேட்டு விராடன் வருந்துதல். தடம்பதியடைந்தகாலைத்தன்மனையிருந்தபேடி திடம்படுதடந்தேரூரத்திருமகன்சென்றசெய்கை விடம்படுவெகுளிவேற்கட்சுதேட்டிணைவிளம்பக்கேட்டாங்கு உடம்புயிரின்றிவீழ்ந்ததென்னுமாறுருகிவீழ்ந்தான். |
(இ -ள்.) (விராடராசன்),- தட பதி அடைந்த காலை - (அவ்வாறு தனது)பெரிய நகரை யடைந்தபொழுதில், - தன் மனை இருந்த பேடி - தனது மாளிகைக்குவந்து சேர்ந்திருந்த பிருகந்நளையென்னும் பேடி, திடம் படு தட தேர் ஊர - வலிமைபொருந்திய பெரிய தேரை யோட்ட, திருமகன் - (தனது) சிறந்தகுமாரனாகிய உத்தரன், சென்ற - (வடக்குப் பக்கத்திற் போர்க்குச்) சென்ற, செய்கை-செய்தியை, விடம் படு வெகுளி வேல் கண் சுதேட்டிணை விளம்ப - நஞ்சுதீற்றிய கோபமுள்ள வேலாயுதம்போன்ற கண்களையுடைய சுதேஷ்ணையாகிய தனதுமனைவி சொல்ல, கேட்டு - (தான்) செவியுற்று, ஆங்கு - அப்பொழுதே [கேட்ட அவ்விடத்திலே], உடம்பு உயிர் இன்றி வீழ்ந்தது என்னும் ஆறு - உடம்பு உயிர் நீங்கி விழுந்த தென்னும்படி, உருகி வீழ்ந்தான் - (போர்த்திறமில்லாத தனது இளங்குமரன் என்னாவனோ வென்னும் வருத்தத்தால்) மனங்கரைந்து மூர்ச்சித்துக் கீழே விழுந்தான்; (எ-று.) |