பக்கம் எண் :

192பாரதம்விராட பருவம்

விறல்கொண்டாடி பேசுதி-பெருமை பாராட்டிப் புகழ்ந்து பேசுகின்றாய்;(எ-று.)

     பிரமம் - ஞானமும், வேதமுமாம்; பிரமமூர்த்தி - ஞானமே ஒருவடிவங்
கொண்டாற்போன்றவ னென்க:  அந்தணரை 'வேதமூர்த்தி' என்றல், வழக்கு.
விவேகியாகிய நீ இங்ஙனங் கூறுதல் தகுமோ? என்பதாம்.  கோடியின் கோடி
- கோடியாகிய கோடியெனப் பண்புத்தொகை; கோடியென்னும்எண்ணினாற்
பெருக்கிய கோடியென்னும் எண் என்பது கருத்து; அது, பதுமமெனவும்,
கோடாகோடியெனவும், மகாகோடியெனவும்படும். தான்-தேற்றம்; ஏ -
பிரிநிலை.  ஒரு தனி - ஒருபொருட்பன்மொழி.                   (281)

123.-இதுவும் அது.

புன்னவையானமாற்றம்புகன்றனரெனினுங்கேட்டாங்கு
இன்னவைநன்றுநன்றென்றிதம்படமொழிவதல்லால்
மன்னவையிருந்துநாளும்வழிபடுமாந்தர்மன்னர்
சொன்னவைமறுத்துமாறுசொல்வரோசுருதிவல்லாய்.

      (இ -ள்.) சுருதி வல்லாய் - வேதம்வல்லவனே! புல் நவை ஆன
மாற்றம்புகன்றனர் எனின்உம் - மிகவும்பிழையான வார்த்தைகளை (அரசர்)
சொல்லினராயினும், கேட்டு - (அவற்றைச் செவிகொடுத்துக்) கேட்டு, ஆங்கு -
அப்பொழுது, இன்னவை நன்று நன்று என்று - 'இவ்வார்த்தைகள்
மிகநன்றாயுள்ளன' என்று, இதம் பட - (அவ்வரசர்க்குப்) பிரியமாக, மொழிவது
அல்லால் - (அரசரையடுத்து வாழ்பவர்) ஒட்டிப்பேசுவதல்லாமல், மன் அவை
நாளும் இருந்து வழிபடும் மாந்தர் - ராஜசபையிலே நாள்தோறும் இருந்து
(அரசர்க்குக்) கீழ்ப்படிந்துநடக்கின்ற மனிதர்கள், மன்னர் சொன்னவை
மறுத்துமாறு சொல்வர்ஓ - (இவ்வாறு) அரசர்சொன்னவற்றைத் தடுத்து எதிர்
பேசுவர்களோ? [பேசார் என்றபடி]; (எ - று.)

     எல்லாந்தெரிந்த உனக்கு அரசரைச்சார்ந்து நடக்கும் முறைமை
தெரியாதோ என்றற்கு, கீழ் 'பிரமமூர்த்தி' என்றும், இங்கு 'சுருதி வல்லாய்'
என்றுங் கூறினான்.  இங்கு, வழிபடுதல் - அரசரது குறிப்பின் வழியிற்சேர்ந்து
ஒழுகுதல்;  என்குறிப்பின் வழிநடப்பதற்குரிய நீ யான் சொன்னவற்றை
வெட்டிப்பேசுதல் தகுதியன்றென்பதாம்.  "இகழி னிகழ்ந்தாங் கிறைமகனொன்று,
புகழினு மொக்கப் புகழ்ப-இகன்மன்னன், சீர்வழிப்பட்டதே மன்பதை மற்றென்
செய்யும், நீர்வழிப்பட்ட புணை" என்ற நீதிநெறிவிளக்கம், இங்கு
நோக்கத்தக்கது.  புல், நவை - ஒருபொருட்பன்மொழி.  'புகன்றனரெனினும்'
என்ற உம்மை - அங்ஙனம் அவர்புகலாரென்பது படநின்றது.
நன்றன்றென்றுசொல்வதாயினும் பின்பு சமயம் பார்த்துத்
தக்கபடிசொல்லவேண்டுமேயன்றி அப்பொழுதே மறுத்துச்சொல்லலாகா
தென்பான் ஆங்கு என்றான்: இன்னவை நன்று - பன்மையில் ஒருமை வந்த
வழுவமைதி:  பன்மையொருமைமயக்கம், 'நன்று நன்று' என்ற அடுக்கு,
உவகை பற்றியது.  ஸ்ருதி என்ற