பக்கம் எண் :

202பாரதம்விராட பருவம்

களில்,வீழ்ந்துபோற்றி - வீழ்ந்து வணங்கி,- மறுப்பது புரியாஞானி -
(சரணமடைந்தவரது வேண்டுகோளைத்) தடுத்தல்செய்யாத தத்துவஞான
முடையவனான அம்முனிவனது, மனம் துனி - மனத்திலடங்கிய சிறு
கோபத்தையும், அகற்றினான் - போக்கினான்;

     "சிறியோர்செய்த சிறுபிழையெல்லாம், பெரியோராயிற்பொறுப்பது
கடனே"என்றார் பிறரும்.  சிறியவர் - அறிவாலும் ஒழுக்கத்தாலும்
பிராயத்தாலும்சிறியவர்.   பூஸு ரன் என்ற வடசொல்லுக்கு -
(பிரமதேஜசினால்) பூமியில்தேவன்போல விளங்குபவ னென்பது பொருள். 
பிறர்வேண்டுகோளுக்குஇசையாமல் மறுதலிக்குங் குணம் இயல்பிலேயே
யில்லாதவ னென்பார்,'மறுப்பது புரியா ஞானி' என்றார்; இத்தொடர்க்கு -
எவராலும்தடுக்கவொண்ணாத கல்வியறிவுடையவனென்ற பொருளும் அமையும்.
சிறியவர்செய்ததீமை -இடைநிலைத்தீவகம்.                  (293)

135.-உத்தரகுமாரனைக்கண்டுசுதேட்டிணை மகிழ்தல்.

ஆன்றமைந்தடங்குகேள்வியண்ணலுமவனைப்பெற்ற
தோன்றலும்பின்னர்ச்சென்றுசுதேட்டிணைகோயிலெய்த
ஈன்றவப்பொழுதினோகையெண்மடங்காகவிஞ்சச்
சான்றதன்மகனைக்கண்டுமகிழ்ந்தனடவத்தின்மிக்காள்.

      (இ -ள்.) ஆன்று அமைந்து அடங்கு கேள்வி - மிக நிறைந்து
அடங்கியிருக்கின்ற நூற்கேள்வியையுடைய, அண்ணல்உம் - பெருந்தன்மையிற்
சிறந்தவனான உத்தரனும், அவனை பெற்ற தோன்றல்உம் - அக்குமாரனைப்
பெற்ற தந்தையான விராடராசனும், பின்னர் - பின்பு, சுதேட்டிணை கோயில் -
சுதேட்டிணைவாழ்கின்ற அந்தப்புரத்துக்கு, சென்று எய்த - போய்ச்சேர,-
தவத்தின் மிக்காள் - தவத்தினால் மிக்கவளாகிய அவள்,- சான்ற தன் மகனை
கண்டு - (வெற்றியாற்) சிறந்த தனது குமாரனைப் பார்த்து, ஈன்ற அ பொழுதின்
ஓகை எண் மடங்கு ஆக விஞ்ச - (தான் அப்) பிள்ளையைப் பெற்றபொழுது
அடைந்த மகிழ்ச்சியினும் (இப்பொழுதை) மகிழ்ச்சி எட்டுப்பங்கு அதிகமாகப்
பெருகாநிற்க, மகிழ்ந்தனள் - சந்தோஷமடைந்தாள்; (எ - று.)

      ஈன்றபொழுதை மகிழ்ச்சி - "வயாவும் வருத்தமும் ஈன்றக்கானோவும்,
கவாஅன் மகற்கண்டு தாய் மறந்தா அங்கு" என்பதனாற் காண்க.  புதல்வனை
மடியிற்கண்ட பொதுஉவகையினும் சால்புடையனாகக்கண்ட சிறப்புஉவகை
பெரிதாதலால், 'ஈன்றவப்பொழுதினோகை யெண்மடங்காக விஞ்ச' என்றார்;
"ஈன்றபொழுதிற் பெரிதுவக்குந் தன்மகனைச், சான்றோனெனக் கேட்ட தாய்"
என்றார் திருவள்ளுவரும்.  ஓகை - உவகை: மரூஉ. எண்மடங்கு என்றது -
பலமடங்கு என்றபடி.  ஆகவே, தாயின் உவகைக்கு அளவின்றென்றவாறாம்.
இங்குத் தாய்க்குத் தவம் - இவ்வாறு நல்லறிவும் நல்லொழுக்கமுமுடைய
குமாரனைப் பெறுதற்கு ஏற்ற நல்வினை.