28.-விராடன் வந்தவனை யுபசரித்துநிரைக்காவல னாக்க, அவன் கோபாலர்க்கெல்லாந் தலைவனாதல். ஆங்கவனிவ்வாறுரைத்தலுமவனையருகுறவருகெனவழைத்துப், பாங்குறத்தக்கவழக்கமும்வழங்கிப்பல்வகைநிரைகளுநீயே, யீங்குமப்படியேபுரத்தியென்றுரைத்தானிவனுமவ்வரசனேவலினாற், றீங்கறக்கைக்கொண்டவ்வவர்க்கெல்லாந்தகைபெறுஞ்செம்மலாயினனே. |
(இ -ள்.) ஆங்கு - அப்போது, அவன் - அந்தச்சகதேவன், இ ஆறு உரைத்தலும் - இப்படிச்சொன்னவுடனே, அவனை-, வருக என - வருவாயாக என்றுசொல்லி, அருகு உற அழைத்து - சமீபத்திலேபொருந்தக் கூப்பிட்டு, பாங்கு உற தக்க - இனிமைபொருந்தத்தகுதியான, வழக்கம்உம் - வரிசைகளையும், வழங்கி-கொடுத்து, (அவனைநோக்கி),-'அப்படி ஏ - சகதேவனிடத்துப்போலவே, ஈங்கு உம் - இங்கேயும், பல்வகை நிரைகள் உம் - பலவகைப்பட்ட பசுக்கூட்டங்களையும், நீயே-, புரத்தி-பாதுகாப்பாய்,' என்று-, உரைத்தான் - (விராடராசன்) சொன்னான்: இவன்உம் - இந்தத் தந்திரிபாலனும், அ அரசன் ஏவலினால் - அந்தவிராடராசனுடைய கட்டளையினால், தீங்கு அற - துன்பமில்லாமல், கைக்கொண்டு - (நிரைகளைத் தன்) வசத்திற்கொண்டு, அ அவர்க்கு எல்லாம் - ஏற்கவேயிருந்த இடையர்கட்கெல்லாம், தகை பெறும் - பெருமைபெற்ற, செம்மல் ஆயினன் - தலைவனாயினான்; (எ - று.) வழக்கம் - கௌரவமாக வழங்கப்படுவது: வரிசை : செயப்படுபொருள் விகுதி பெற்ற பெயர். (28) வேறு. 29.-திரௌபதி வண்ணமகளாகி, விராடமன்னவனுடைய தேவியின் கோயிலை நாடி யடைதல். ஓமமக வாரழலி னூடுருவுயிர்க்கும் மாமயிறி ரௌபதியும்வண்ணமக ளாகித் தேமருவு தார்முடிவி ராடனிருதோள்சேர் கோமகளை நாடியவள்கோயிலிடை புக்காள். |
(இ - ள்.) ஓமம் மகம் ஆர் அழலினூடு- ஓமஞ்செய்த யாகத்தின் நிரம்பிய நெருப்பினிடையிலே, உரு உயிர்க்கும் - உருவங்கொண்டு வெளிப்பட்ட, மா மயில் - சிறந்த மயில்போன்ற, திரௌபதிஉம்-, வண்ணம் மகள் ஆகி - மகளிர்க்கு அலங்காரஞ்செய்யும் பணிப்பெண் வடிவுகொண்டு, தேன் மருவு தார் முடி விராடன் இருதோள் சேர்-தேன் பொருந்திய மாலைசூடிய முடியையுடைய விராடனுடைய இரண்டுதோளையுஞ் சேர்ந்த, கோமகளை - இராணியை, நாடி - அடையவிரும்பி, அவள் கோயிலிடை - அந்தஇராணியின் அரண்மனையிலே, புக்காள் - புகுந்தாள்; (எ - று.)-விராடன் தேவியின் பெயர் - சுதேஷ்ணை யென்பது. |