இவர்,தானையோடுஉம் - சேனையுடனே, சால்புடன்-நிறைகுணத்தோடு, அ பதி வந்தனர் - (பாண்டவரிருந்த) அவ்விராட நகரத்து வந்து சேர்ந்தார்கள்; (எ- று.) சால்பு- மனவமைதியுமாம். பொன்னைக் கொழித்துக்கொண்டு வருதலால், காவேரிக்குப் பொன்னியென்று ஒருபெயர். காவேரியால் மிக்க வளம்பெற்றது சோழநாடே யாதலால் அது 'பொன்னிநாடு' எனப்படும். (321) 22.-காட்டில் நெடுநாள்வசிக்கலாயிற்றே என்று பாண்டவரைக் கண்டு வருந்திக் கூறும் நிருபர்க்குத் தருமன் கூறலுறுதல். வந்தோகையோடுமிருபாதம்வணங்கிவைகும் கந்தோடடர்கைக்கடுங்கோபக்களிற்றுவேந்தர் அந்தோநெடுநாளகன்கானிலடைந்திரென்று நொந்தோரையாற்றிநுவல்வானந்நுதிகொள்வேலான். |
(இ -ள்.) வந்து-, ஓகையோடுஉம் - சந்தோஷத்துடனே, இரு பாதம் வணங்கி - (தருமபுத்திரனுடைய) இரண்டு தாள்களிலே கும்பிட்டு, வைகும் - தங்கிய, கந்தோடு அடர் கை கடுங் கோபம் களிறு வேந்தர் - கட்டுத்தறியையடர்க்கின்ற துதிக்கையையும் கொடிய கோபத்தையுமுடைய களிற்றுப்படையையுடைய அரசராகி, 'நெடுநாள் அகல் கானில் அடைந்திர் - வெகுநாள் அகன்ற காட்டிலே தங்கி வசித்தீரே: அந்தோ - ஐயோ,' என்று-, நொந்தோரை - மனம் வருந்தினவரை, ஆற்றி - சமாதானப்படுத்தி, அ நுதி கொள் வேலான் - அந்தக்கூர்மையான வேற்படையையுடைய தருமபுத்திரன், நுவல்வான் - (பின்வருமாறு) சொல்பவனானான்; (எ - று.) - தருமன் சொல் வதை மேலிற்கவியிற் காண்க. (322) 23.-'விராடநகரில் ஒருவருஷம்வசித்ததனால் காட்டில் திரிந்த வருத்தமெல்லாம் நீங்கிற்று' என்று தருமன் கூறுதல். தேனிற்குளித்தசிறையம்புயச்சேக்கையன்னம் வானிற் பறந்துபுலர்த்தும்புனன்மச்சநாடன் வேனிற்சிலைவேள்விராடன்புரமேயவன்றே கானிற்றிரிந்தபரிதாபங்கழிந்ததென்றான். |
(இ -ள்.) (தருமன்), 'அம்புயம் சேக்கை - தாமரைமலரைப் படுக்கையாகக்கொண்ட, அன்னம்-, தேனில்-, குளித்த - நனைந்த, சிறை - (தம்) இறகுகளை,வானில் பறந்து - (ஆகாயத்திலே) பறந்து போய், புலர்த்தும் - உலர்த்துமாறு(வளம்படைத்த), புனல் - நீரைக் கொண்ட, மச்சநாடன் - மச்சநாட்டிற்குஉரியவனாகிய, வேனில் சிலை வேள் - வேனிற்காலத்தில் வில்லையேந்திக்கொண்டு திரிபவனான மன்மதனையொத்த, விராடன் - விராடராசனுடைய, புரம் - பட்டணத்தை, மேய - வசிக்குமாறு பொருந்திய, அன்றுஏ - அன்றைய தினமே, கானில் திரிந்த - காட்டிலே (பன்னிரண்டியாண்டுகள்) திரிந்ததனாலான, பரிதாபம் - துன்பம், கழிந்தது - நீங்கிற்று, என்றான்-; (எ - று.) (323) |