பக்கம் எண் :

கீசகன் வதைச் சருக்கம் 41

நெற்றி படதொழுதான் - (தன்) நெற்றிபட வணங்கினான்: வடிவேல்கணாள்
உம் - கூரிய வேற்படைபோன்ற கண்களையுடையளான அந்தத் திரௌபதியும்,
வெகுண்டு - கோபங்கொண்டு,-தூதுளை கனிவாய் முத்தம் வாள் நகை
சுதேட்டிணைப் பெயராளுழை - தூதுளம் பழம்போன்ற சிவந்த வாயையும்
முத்துப்போன்று ஒளிபொருந்திய பற்களையுமுடையளான சுதேஷ்ணை
யென்பாளிடத்தில், விரைவினில் துன்னினாள் - விரைவாகப் போய்ச்சேர்ந்தாள்;
(எ - று.)-முன்பு உறா ஆதரத்து என்று என இயைத்து - இதற்கு முன்பில்லாத
காதலோடு என்றுகூறி எனினுமாம்.                           (60)

9.-சென்ற திரௌபதிதன்வருத்தம் தோன்றநின்று
அவளிடத்து நிகழ்ந்ததுகூறுதல்.

நடுங்குமெய்யினள்பேதுறுநெஞ்சினணாணுநீர்மையணா
                                      வினுணீரிலாது,
ஒடுங்குமென்மையடன்மையினாற்புன லுகுத்தககண்ணினளோவியம்
                                      போன்றுளாள்,
கடுங்கண்யானைப்பிடரிருந்திந்நிலங் காக்கும்வெண்
                           குடைக்காவலன்றேவிகேள்,
தொடுங்கழற்கழலானின்றுணைவனெற்சுட்டியாயிரஞ்சொல்லல
                                      சொல்லினான்.

இரண்டு கவிகள் - ஒருதொடர்.

      (இ -ள்.) ஓவியம் போன்றுஉளாள்-சித்திரப்பதுமை
போன்றுள்ளவளாகியஅந்தத் திரௌபதி,-நடுங்கும் மெய்யினள்-(அச்சத்தினால்)
நடுக்கமடைந்தஉடம்பையுடையவளும், பேதுறு நெஞ்சினள்-கலங்கிய மனத்தை
யுடையவளும்,நாணும் நீர்மையள் - நாணுகின்ற தன்மையையுடையவளும்,
நாவினுள் நீர்இலாது ஒடுங்கும் மென்மையள் - (தனக்கு நேர்ந்திருக்கின்ற
அவஸ்தையைஎண்ணித் தன்) நாவினிடத்து நீரூறுதலுமில்லாமல்(வறண்டுபோக)
ஒடுங்குதற்குக்காரணமான மென்மைத்தன்மை யுடையவளும், தன்மையினால் -
(மெல்லியலான) தன்மைக்குஏற்ப, புனல் உகுத்த கண்ணினள் -
நீரைச்சிந்துகின்ற கண்களையுடையவளுமாய்,-கடுங்கண் யானை பிடர் இருந்து
இ நிலம் காக்கும் வெள் குடை காவலன் தேவி - கொடிய கண்களையுடைய
யானையின் பிடரியிலே யிருந்துகொண்டு இந்தப்பூவுலகைக் காக்குந்
தன்மையுள்ள வெண்கொற்றக்குடையையுடைய அரசனுடைய மனைவியே! கேள்
- (நிகழ்ந்ததைக்) கேட்பாயாக: தொடும் கழல் கழலான்-அணிந்த வீரக்கழலை
யுடைய பாதங்களை யுடையனான, நின் துணைவன் - உன்னுடன் பிறந்தவன்,
என் சுட்டி - என்னைக் குறித்து, சொல் அல ஆயிரம் சொல்லினான் -
சொல்லத்தகாதனவான பலவார்த்தைகளைச் சொன்னான்; (எ - று.)

     முதலிரண்டடிகள்-அந்தத்திரௌபதிக்கு அச்சத்தினால் தோன்றிய
மெய்ப்பாடுகளை விளக்குவன.  மூன்றாமடி - நீதிநெறிநடத்தும் மன்னவனுக்கு
நீ மனைவி யாதலால், அநீதிநடவாமல்; பார்க்கவேண்டுவது உனக்கும்
பொறுப்பே யென்பதைக் குறிப்பிக்கும்.                              (61)