பக்கம் எண் :

நாடுகரந்துறை சருக்கம் 5

துணிந்து-(தன்)மனத்தினால் (அவ்வாறே செய்வதாக) நிச்சயித்து,-பாங்குஉறை
அரசர் யாரைஉம்-(தன்) பக்கத்திலேயே வசிப்பவரான அரசர்களெல்லாரையும்
பார்த்து, தம்தம் பதிகள்ஏ செல்க என - 'தங்கள் தங்களுடைய ஊருக்குச்
செல்வீர்களாக' என்று, பகர்ந்தான்-சொன்னான்; (எ - று.)

     அருச்சுனன் சொன்ன ஆலோசனை தன்மனத்திற்கு ஏற்றிருந்ததனால்,
தருமபுத்திரன், அவ்வாறே செய்வதாக நிச்சயித்துப் பிறகு
ஆலோசனையிடத்தை விட்டுச்சென்று வனத்தில்
தன்னோடிருந்தவர்களையெல்லாம் இனித் தாம் அஜ்ஞாதவாசஞ்
செய்யவேண்டியிருப்பதனால் தங்கள் தங்களுடைய உறைவிடத்துச்
செல்லுமாறுவிடைகொடுத்தனுப்பின னென்பதாம்.  அரசர் யாரையும் என்பதற்கு
- அரசரையும் மற்றுமுள்ளாரையும் என்றும் உரைக்கலாம்.  ஆலோசனை
செய்யுமிடத்தில், யுதிஷ்டிரன், 'பன்னிரண்டு வருடம் வனவாசம் கழித்தோம்.
இனி, அஜ்ஞாதவாசம் எங்கு எப்படிச் செய்வது?' என்று கவலை கொண்டு
கூற, அப்போது அருச்சுனன், 'தருமக்கடவுளின் வரத்தால் அஜ்ஞாதவாசஞ்
செய்வது நமக்கு இனிது இயலும்:  அதைப்பற்றிக் கவல வேண்டா: பாஞ்சாலம்
மச்சம் சால்வம் முதலிய பல நாடுகள் இருக்கின்றன:  இவற்றில் மனத்திற்குப்
பிடித்த ஒரு தேசத்தில் வசிக்குமாறு நிச்சயித்துக்கொள்க' என்ன, யுதிஷ்டிரன்
மச்சதேசமே வாசத்துக்கு ஏற்ற இடம் என்று நிச்சயித்து, 'அங்கு நான் வேறு
தொழிலின்றிக் கங்கன்என்ற பேருடனே துறவி வேஷம்பூண்டு அரசசபையில்
வசிப்பேன்:  வினோதத்திற்குச் சூதாட்டம் ஆடுவேன்:  மற்றும் சோதிடம்
சகுனம் நீதி வேதாந்தம் முதலியன சொல்லிக்கொண்டு மன்னவனுக்கு
உத்ஸாஹமூட்டிக் காலங்கழிப்பேன்' என்று தன்செயலையும் கூறினான்.  பிறகு
வீமசேனன் முதலிய ஒவ்வொருவரையும் நோக்கித் தனித்தனியே 'அங்கு நீர்
என்னதொழிலைச் செய்து கொண்டு ஓரியாண்டு கழிப்பீர்?' என்று வினவ,
ஒவ்வொருவரும் இன்னஇன்ன தொழிலைச் செய்துகொண்டு இருப்போம் என்று
பதில் கூறினார் என்று முதனூலிலுள்ளது.                        (5)

6.-இருடியருக்குத் தருமபுத்திரன்விடைகொடுத்தனுப்புதல்.

முனிவராயுள்ள தபோவனத்தவரைமுடியுறத்தனித்தனிவணங்கிக்
கனிவுறுமன்பாலென்றுநானும்மைக்காண்பதென்றவர்மனங்களிப்ப
இனியனவுரைகள் பயிற்றியாவரையுமேகுவித்திற்றைநாளிரவில்
தினகரனெழுமுன்செல்வமச்செல்வந்திகழ்தருநகர்க்கெனச்செப்பா.

    இதுவும் அடுத்தகவியும் - ஒருதொடர்.

      (இ -ள்.) முனிவர் ஆய் உள்ள - இருடியரான, தபோவனத்தவரை -
தபோவனத்தில் வசிப்பவரை, முடி உற - (தனது) கிரீடம்
(அவர்கள்பாதங்களிலே) பொருந்தும்படி, தனித்தனி வணங்கி - தனித்தனியே
வணக்கஞ்செய்து,-கனிவு உறும் அன்பால் - மனக்