யார் கொல்வல்லவர் - அந்தப்பராக்கிரமச் செயலைச் செய்யவல்லவர் வேறுயாவருளர்? (எ - று.)-மூன்றாமடியில், ஆற்றினான் என்றும் பிரிக்கலாம். (134) 83.- கீசகனை வீமன்வதைத்ததைப் பற்றிய கவிக்கூற்று. பண்ணியவினைகளின்பயனலாதுதாம் எண்ணியகருமமற்றியாவரெய்தினார் திண்ணியகீசகன்செய்ததீங்கிவன் புண்ணியமானதாற்புகல்வதென்கொலாம். |
(இ -ள்.) பண்ணிய-(அவரவர்) செய்த, வினைகளின்-புண்ணியபாவ ரூபமான செய்கைகளின், பயன் அலாது - பயனை அடைவதல்லாமல், தாம் எண்ணிய கருமம் - தாம் நினைத்த செயலை, மற்று-வினைப்பயனுக்குமாறாக, எய்தினார் யாவர்-(தாம் நினைத்தபடி) அடைந்தவர் யாவர்? திண்ணிய கீசகன் - வலிமையுள்ள கீசகன், செய்த-, தீங்கு - தீச்செயல், இவன் - இந்த வீமசேனனுக்கு, புண்ணியம் ஆனது - நல்வினைப்பயனைத் தருவதாக ஆயிற்று; புகல்வது என்கொல் - (இதுபற்றி நாம் வேறு) சொல்லத்தக்கது யாது? (எ - று.) கீசகன் திரௌபதியைச் சேரக்கருதிவந்தது தீச்செய லாதலால் அத்தீவினைப்பயன் அவனை யழிக்க, அதுவே வீமனுக்கு வெற்றியைத் தரும் புண்ணியப்பயனாக இருந்த தென்று, கவி, உலகோருக்கு ஒருநீதியை இதனாற் கற்பிக்கின்றன ரென்க. முதலிரண்டடிகட்கு - கீசகன் தான் செய்த வினைப்பயனை யடைந்தானேயன்றி, எண்ணிய பயனைப் பெறவில்லையென்க. ஆல் - தேற்றம். ஆம் - அசை. (135) 84.-கீசகனுடலைக் கால் தலைஎன்று தெரியாதபடி சுருக்கினபின்பு திரௌபதியைவீமசேனன் அழைத்தல். செங்கைகாலுடலொடுசென்னிதுன்றிட அங்கையாலடக்கிநின்றநேகமாயிரம் வெங்கையானையின்மிடல்வீமன்வெற்பன கொங்கையாடன்னையுங்கூவினானரோ. |
(இ -ள்.) செம் கை - செந்நிறமுள்ள கை, கால்-, உடலொடு-உடல், சென்னி - தலை என்ற இவைகள் யாவும், துன்றிட - ஒன்றுபட்டுச் சேர, வெம் கை அநேகம் ஆயிரம் யானையின் மிடல் வீமன் - விரும்பத்தக்க துதிக்கையையுடைய அனேகவாயிரம் யானைகளின் வலிமையைப்படைத்த வீமசேனன், அம் கையால் அடக்கிநின்று - (தன்னுடைய) அழகிய கையாற் சுருக்கி, வெற்புஅன கொங்கையாள் தன்னைஉம் - மலையையொத்த தனங்களையுடையளான திரௌபதியையும், (அதனைக்காட்டும்பொருட்டு), கூவினான்-அழைத்தான் ; (எ - று.) - அரோ - ஈற்றசை.' (136) |