85.-வீமன் அந்தக்கீசகனுடலைத் திரௌபதியின் பாததலத்தில் வைத்தல். பூங்கொடியனையவள்புறவடிப்புறத்து ஓங்கியகீசக னுடற்பிழம்பினை நீங்கியவாய்மைகணிகழ்ந்ததென்னவே பாங்கினில்வைத்தடற்பவனன்மைந்தனே. |
இரண்டுகவிகள் - ஒருதொடர். (இ -ள்.) பூங் கொடி அனையவள் - பூங்கொடி போன்றவளான அந்தத் திரௌபதியின், புறம் அடிப்புறத்து - புறவடியினிடத்து, ஓங்கிய கீசகன் உடல் பிழம்பினை - (குன்றுபோல) உயர்ந்திருந்த கீசகனுடற் பிண்டத்தை, அடல் பவனன் மைந்தன் - வலிமையுடைய வாயுகுமாரனான வீமன், நீங்கிய வாய்மைகள் நிகழ்ந்தது என்ன-ஒழுக்கந்தவறிய வாய்வார்த்தைகளால் நேர்ந்ததாகும் (இத்தன்மை) என்று கருதும்படி, பாங்கினில் வைத்து - இனிதாகவைத்து, (எ - று.) - "துயரநீங்க, சுவாலைசெய்தனன்" என மேலிற் கவியில் முடியும். அந்தக்கீசகன் சொல்லத்தகாத வார்த்தைகளைச் சொல்லியதும் நேர்மையற்ற வழியில் ஒழுகியதுமே அவன் மாண்டதற்குக் காரணமாதலால், அவற்றை யுணர்ந்தவர்கள் கீசகனுடற் பிழம்பினைக் காண, நீங்கிய வாய்மைகளால் இது நிகழ்ந்ததென்ப ரென்க. நீங்கிய வாய்மைகள் - தவறிய நேரிய வழிகள் என்றுமாம். (137) 86.-வீமன் ஒருமரத்தைப்பிடுங்கிக் கைகளாற் பிசைந்து தீயெழச்சுவாலைசெய்துகீசகனுடலைத் திரௌபதிக்குக் காட்டுதல். விடுங்குழைமராமரமொன்றுவேருடன் பிடுங்கினன்கைகளாற்பிசைந்துதீயெழச் சுடுங்கொலென்றஞ்சிலன்சுவாலைசெய்தனன் நெடுங்கணாள்கண்டுதன்றுயரநீங்கவே. |
(இ -ள்.) விடும் - மேன்மேல் தோன்றுகின்ற, குழை - தளிர்களை யுடைய, மராமரம் ஒன்று - ஒருமராமரத்தை, வேருடன் பிடுங்கினன் - வேரோடு பிடுங்கி, கைகளால் பிசைந்து - (தன்) கைகளால் (நெருப்புத் தோன்றுமாறு அந்தமரத்தைப்) பிசைந்து, தீ எழ சுடும் கொல் என்று அஞ்சிலன் - (அங்ஙன் பிசைந்தபோது அதினின்று) அக்கினி தோன்றவும் சுடுமோ என்று சிறிதும் அஞ்சாதவனாய், நெடுங் கணாள் கண்டு தன் துயரம் நீங்க-நீண்ட கண்களையுடையவளான திரௌபதி கண்டு தன்துயரம் நீங்குமாறு, சுவாலை செய்தனன்-(தோன்றிய நெருப்பைக்) கொழுந்துவிட்டெரியச் செய்தான் ;(எ - று.) பிடுங்கினன், அஞ்சிலன் - முற்றெச்சங்கள். (138) |