பக்கம் எண் :

கீசகன் வதைச் சருக்கம் 91

101.போனபோனதிசைதொறும்போய்த்தொடர்ந்து
ஆனவானவனொக்கவக்கோட்டினால்
மானமும்மவராவியும்வாங்கினான்
ஏனையோர்களுந்தம்முனொடெய்தினார்.

      (இ -ள்.) போன போன திசைதொறுஉம் - (உபகீசகர்) ஓடிப்போன
திக்குக்களிலெல்லாம், தொடர்ந்து போய் - (அவர்களைத்) தொடர்ந்து சென்று,
ஆன - (திரௌபதியைக் காப்பதற்காக) வந்த, வானவன் ஒக்க -
கந்தருவதேவனையொப்ப (த்தோன்றி), அ கோட்டினால் - அந்த
மரக்கிளையினால், மானம்உம் - (அவர்களுடைய) கருவத்தையும், அவர்
ஆவிஉம் - அவர்களுடைய உயிர்களையும், வாங்கினான் - (வீமன்)
பறிக்கலானான்: ஏனையோர்கள்உம் - மற்றையோரான உபகீசகர்களும்,
தம்முனொடு எய்தினார் - தம் அண்ணனோடு போய்ச் சேர்ந்தார்கள்
[இறந்தார்கள்]: (எ - று.)

     தொடர்ந்து-, ஆன - பொகுந்திய, வானவன் - பெரியோனான
வீமசேனன், ஒக்க - ஏற்க என்று உரைப்பாரு முளர்.  இரண்டாமடியில்,
ஆனைமானவனக்கொடுங்கோட்டினான் என்றும் பாடம்.             (153)

102.-ஊரார் வருந்துதல்.

துவன்றகற்புடைத்தோகையைவிட்டுமுன்
நுவன்றகீசகர் நூற்றொருமூவரும்
அவன்றனவாகுவினாலழிவுண்டபின்
கவன்றதாலக் கடிநகரெங்குமே.

      (இ -ள்.) துவன்ற - நெருங்கிய, கற்பு உடை-பதிவிரதைத் தன்மையை
யுடைய, தோகையை - மயில்போன்ற சாயலையுடையளான திரௌபதியை,
விட்டு-(தாம் ஈமவெரியிலிடுமாறு பற்றியிருந்ததை) விட்டிட்டு, முன் நுவன்ற
கீசகர் நூற்றொருமூவர்உம் - முன்னே சொன்ன உபகீசகர் நூற்றுமூன்று
பேர்களும், அவன் தன் வாகுவினால் - அந்த வீமசேனனுடைய கையினால்,
அழிவுண்டபின்-இறந்து விட்டபிறகு, அ கடி நகர் எங்குஉம் கவன்றது -
அந்தக் காவலுள்ள நகரம்முழுதும் வருந்திற்று; (எ - று.)-ஆல் - ஈற்றசை.

     ஏககாலத்தில் விராடனுடைய தேவியின் தம்பியர்யாவரும் இறந்தது
குறித்து நகரத்தவர் சோகித்தன ரென்பதாம்.  நகரத்துக்குப் பாதுகாவல்
குறைந்திட்டது குறித்துச் சோகித்தன ரெனலுமாம்.  நூற்றொடொரைவரும்
என்றுபாட மிருக்கலாம்.                                       (154)

103.-இரண்டுகவிகள் ஒருதொடர் :நகரத்தவர்கீசகவதத்தால்
நடுங்கிட, வீமனும் திரௌபதியும் தத்தமிடத்தைச் சேர்தல் கூறும்.

கற்கும்யாழுடைக்கந்தருவர்க்கெதிர்
நிற்பரோவுடனேர்பொரமானவர்
கிற்குமைந்துடைக்கீசகர்யாவரும்
தற்கினான்மடிந்தார்தகவொன்றிலார்.