(பகைவர்பிழைகளைப்) பொறுத்த செய்கைகளெல்லாம் போதாமல், இன்னம் இருந்து அறமே சொன்னால் - இப்பொழுதும் (போர் முயற்சியின்றிப்) பொறுத்து இருந்து (அப்பொறுமையாகிய) தருமத்தையே போதித்துக்கொண்டிருந்தால், எ காலம் - எப்பொழுது, பகை முடித்து - (நாம்) பகைவர்களைக் கொன்று, (அதன் பிறகு), திரௌபதியும் குழல் முடிக்க இருக்கின்றாள் - திரௌபதியும் (தனது சபதத்தை நிறைவேற்றித் தனது விரித்த) கூந்தலையெடுத்து முடித்து அலங்கரிக்க இருக்கின்றாள்! (எ - று.) - இரண்டாமடியின் ஈற்றில், மன், ஓ - அசைகள். தாங்கள் செய்த சபதங்களுக்கெல்லாம் திரௌபதியினது பரிபவமே காரணமாதலால், அவள் பிரதிஜ்ஞையையே பிரதானமாக எடுத்துக் கூறினன். ஊர்தி- ஏறி நடத்தப்படுவது என வாகனத்துக்குக் காரணப்பெயர்; ஊர்தல் - ஏறிச் செலுத்தல்: இ - செயப்படுபொருள்விகுதி, த் - எழுத்துப்பேறு. மேகவாகந னென்று இந்திரனுக்கு ஒருபெயர். காலமுகில் - காலமென்னும் பொதுப்பெயர், இங்கே சிறப்பாய்க் கார்காலத்தைக் குறிக்கும். இனி, மைக் கால முகில் - அஞ்சனம் போலக் கரிய மேக மென்றுமாம். மைக்காலமுகில் - நீர்கொண்ட மேக மென்றபடி. கடவுள் ஸர்வஜ்ஞ னாதலால், 'முக்காலங்களுமுணரும்' என்ற அடைமொழி கொடுக்கப்பட்டது, இங்கு 'முக்காலம்' என்றது - முக்காலவரலாற்றை யுணர்த்தியதனால், காலவாகு பெயர். முகுந்தன் - முத்தியுலக இன்பத்தையும், இவ்வுலக இன்பத்தையும் (தன்னடியார்க்குத்) தருபவன்; மு - முக்தி, கு - பூமி, த - கொடுப்பவன், 'பொறுத்த' என்பதைப் பெயரெச்சமாகவும், பலவின்பால் வினையாலணையும் பெயராகவுங் கொள்ளலாம். 'முடித்து' என்னும் செயவெனெச்சம் பிறகருத்தாவின் வினைகொண்டு முடிதற்கு ஏலாதாதலால், அதனை, அவ்வினையையுங்கொள்வதற்கு ஏற்ற செயவெனெச்சமாக 'முடிக்க' எனத் திரித்துக் கொள்க. துரியோதனன் செய்த குற்றம் பலவாதல்பற்றி, அவற்றைப்பொறுத்தலும் பலவாதலால், 'பொறுத்தவெலாம்' எனப் பன்மையாகக் கூறப்பட்டது. (82) 23. | தேவராயினும் பழையதெயித்திய ராயினுமற்றுஞ் செப்புகின்றோர், யாவராயினு மெதிர்ந்தோ ருயிருணவென் றிருப்பதுவேயென் கைவாளி, மூவராயவர்களுக்கு முதல்வனாகிய மூர்த்தி முகிறோய்பூக, மீவராலுகளும்வயற்குருநா டென்னிவ னவன்பால் வேண்டுமாறே. |
(இ -ள்.) மூவர் ஆயவர்களுக்கும் முதல்வன் ஆகிய மூர்த்தி - திரிமூர்த்திகளுக்கும் காரணனான சிறந்தவடிவமுடைய பெரியோனே! தேவர் ஆயினும் - தேவர்களானாலும், பழைய தெயித்தியர் ஆயினும் - பழமையான அசுரர்களானாலும், மற்றும் செப்புகின்றோர் யாவர் ஆயினும் - இன்னும் சொல்லப்படுகிறவர் எவரானாலும், எதிர்ந்தோர் - (போரில்) எதிரிட்டவர்களது, உயிர் - உயிரை, உண என்றே - உண்ணும்பொருட்டாகவே, என்கை வாளி - எனது |