செய்யும்ஊஷரபூமியை. அது ஒருவாற்றாலும் பயன்படாத அறிவிலார்க்கு உவமையாதலை, "பயவாக்களரனையர் கல்லாதவர்" எனத்திருக்குறளிலுங் காண்க. நெல் முளை எனப் பதம் பிரித்து உரைத்தலில், பொருட் சிறப்பின்மைஉணர்க. தீமையடைவிக்க வேண்டிய முன்னைய பிறப்பின் கருமம் வந்துஉற்றபோது எந்த நியாயமும் மனத்திற்கு இணங்காதாதலால், 'விதிவலியாற்கெடுமதி கண் தோன்றாதன்றே' எனப்பட்டது; "பேதைப்படுக்கு மிழவூழறிவு"என்றார் திருவள்ளுவனாரும்.
எந்நாளும் என்ற உம்மை - முற்றுப்பொருளது: மற்ற உம்மைகள் - உயர்வுசிறப்பு. பன்னாகம் - பந்நகம் என்பதன் விகாரம்; பல் நாகம் எனப் பதம்பிரித்து, விஷப்பற்களையுடைய பாம்பு எனினுமாம்: 'பைந்நாகம்' என்ற பாடத்துக்கு - படத்தையுடைய பாம்பென்க. பொன் ஆரும் - திருமகள் பொருந்தியிருக்கப்பெற்ற என்று உரைத்து, திகிரியினானுக்கு அடைமொழியாக்கினும் அமையும். அமிர்தம் - மரணத்தைத் தவிர்ப்பது. (85) 26.-இக்கவியிற்பின்னிரண்டடிகளும், அடுத்த மூன்று கவிகளும் - நகுலன் வார்த்தை. பார்த்தனிவை புகன்றிறைவன்பணித்தருள விருந்ததற்பின் பரிவினோடுந், தீர்த்தனிருபதமிறைஞ்சித் தருமனையுங் கைதொழுது சினங்கொள்வேலான், நீத்தநெடுங்கடலெழுபா ரடலைவர் பெறுவரெனுநிகழ்ச்சி பொய்யோ, கோத்தருமந்தனிலாண்மை கூறாதோ கூறுகநீகொற்ற வேந்தே. |
இதுமுதல் நான்கு கவிகள் - ஒரு தொடர். (இ -ள்.) பார்த்தன் - அருச்சுனன், இவை புகன்று - இவ்வார்த்தைகளைச் சொல்லி, இறைவன் பணித்தருள - (யாவர்க்குந்) தலைவனாகிய கண்ணபிரான் (கோபந்தணிவாயென்று) அடக்கிக்கூறி யருள, இருந்ததன் பின் - (பேச்சை முடித்த) இருந்தபின்பு,- சினம் கொள்வேலான் - கோபத்தைக்கொண்ட வேலாயுதத்தையுடையவனான நகுலன்,- பரிவினோடும் - அன்புடனே, தீர்த்தன் இரு பதம் இறைஞ்சி - பரிசுத்தமூர்த்தியான கண்ணபிரானது இரண்டு திருவடிகளையும் வணங்கி, தருமனையும் கைதொழுது - யுதிட்டிரனையும் கைகூப்பித் தொழுது, (யுதிட்டிரனை நோக்கி),- கொற்றம் வேந்தே - வெற்றியையுடைய அரசனே! 'நீத்தம் நெடுங் கடல் எழுபார் - வெள்ளமயமான பெரிய கடலினாற் சூழப்பட்ட ஏழு தீவுகளாகவுள்ள பூமி முழுவதையும், அடல் ஐவர் பெறுவர் - வலிமையையுடைய பஞ்சபாண்டவர்கள் (துரியோதனாதியரினின்று) பெறுவார்கள்,' எனும் நிகழ்ச்சி - என்று (உலகத்தார்) சொல்லுஞ் சொல், பொய்யோ - பொய்யாகுமோ? கோ தருமந்தனில் ஆண்மை கூறாதோ - இராசதருமத்தில் (பராக்கிரமம் முதலிய) ஆண்மகனுக்கு உரிய தன்மை சொல்லப்பட வில்லையோ? [பொறுமைதான் சொல்லப்பட்டுள்ளதோ?] நீ கூறுக - நீ சொல்வாயாக;(எ-று.) |