கீழ்வீமன்வார்த்தை முடிந்தபின்பு கண்ணன் "அம்புவியில் முன் பிறந்தோ ரரசுநெறி முறையுரைத்தா லதுகேளாமல், தம்பியரும் மறுப்பரோ தலைவ வினிக்கடுங் கோபந்தணிக" என்றுகூறி அவனைச் சாந்தப்படுத்தியதற்கும், மேல் நகுலன் வார்த்தை முடிந்த பின்பு நன்றெனக் கையமைத்தருளுவதற்கும் ஏற்ப, இங்கு 'இறைவன் பணித்தருள' என்பதற்கு இவ்வாறு பொருள் கொள்ளப்பட்டது. தாமே வெற்றி பெறுதல் நிச்சயமென்பதை விளக்குதற்கு 'அடலைவர்' என்றும், 'நிகழ்ச்சி பொய்யோ' என்றும் கூறினான்: அடுத்த செய்யுளின் ஈற்றடியிலும் இக்கருத்துப்பட வுரைத்தல் காண்க. இங்கே 'நிகழ்ச்சி' என்றது, 'பொறுத்தவர் பூமியாள்வார்' என உலகத்து வழங்குவதையு மாகலாம். அரசர்கள் பராக்கிரமத்தைக் காட்டுவது இராச தருமமன்றோ? என்பது இறுதியடியின் கருத்து. பார்த்தன் - பிருதையின் மகன்; தத்திதாந்தநாமம், (பிருதை - குந்தி.) இது, அருச்சுனனுக்குச் சிறப்பாகவழங்கும் காரணவிடுகுறி; தாய்க்கு இளைய மகனிடத்தில் அன்பு மிகுதியென்ற பொதுநியாயம் இதற்குக் காரணமாகலாம். இறைவன் - தலைமையுணர்த்தும் இறைமையென்னும் பண்பினடியாகப் பிறந்த பெயர்: இனி, அந்தரியாமியாய் எல்லாப் பொருளிலுந் தங்குகிறவன் என்றும் பொருள் கொள்ளலாம்; இறுத்தல் - தங்குதல். இருந்ததற்பின் என்பதற்கும், இறைஞ்சி தொழுது வேலான் என்பவற்றிற்கும் - மேல் முப்பதாங்கவியில் 'உரைத்ததற்பின்' என வருவது, முடிக்குஞ்சொல். தீர்த்தன் - திருமாலுக்குப் பெயராதலை, "தீர்த்த னுலகளந்த சேவடி" எனத் திருவாய்மொழியிலுங் காண்க. உடையானது சினத்தை ஆயுதத்தின் மேல் ஏற்றி, சினங்கொள்வேல் என்றார்;உபசார வழக்கு: இனி 'சினங்கொள்' என்பது - வேலானுக்கு அடைமொழியாகலுமாம்.
நீத்தம் - நீந்தப்படுவது என வெள்ளத்துக்குக் காரணக்குறி: நீந்து - பகுதி, அம் - செயப்படுபொருள் விகுதி, வலித்தல் - விகாரம். எழுபார் - ஜம்பூ, பிலட்சம், குசம், கிரௌஞ்சம், சாகம், சால்மலி, புஷ்கரம் என்னும் ஏழு தீவுகளாக வுள்ளவை. ஏழுதீவுகளும் ஏழுகடல்களுள் தனித்தனி ஒவ்வொன்றாற் சூழப்பட்டுள்ளனவென்பது, புராணக்கொள்கை. ஏழுகடல்கள் - உவர்நீர், கருப்பஞ்சாறு, கள், நெய், தயிர், பால், நன்னீர் என இவற்றின் மயமானவை. (86) 27. | கேவலந்தீர் வலியபகை கிடக்கமுதற் கிளர்மழைக்குக் கிரியொன்றேந்து, கோவலன் போயுரைத்தாலுங் குருநாடுமரசுமவன் கொடுக்கமாட்டான், நாவலம்பூதலத்தரசர் நாடிரந்தோமென நம்மை நகையாவண்ணங், காவலன்றன் படைவலியுமெனது தடம்புயவலியுங் காணலாமே. |
(இ -ள்.) கேவலம் தீர் - சிறுமை யில்லாத [பெரிய என்றபடி], வலிய பகை - உறுதியான பகைமை, கிடக்க - (நமக்கும் அவர்க்கும் வெகுகாலமாக) நிலைத்திருப்பதனால், - முதல் கிளர் மழைக்கு |