பக்கம் எண் :

112பாரதம்உத்தியோக பருவம்

31.- சகதேவன் வார்த்தை.

சிந்தித்தபடி நீயுஞ்சென்றாலென் னொழிந்தாலென் செறிந்த நூறு,
மைந்தர்க்குண்முதல்வனிலம் வழங்காம லிருந்தாலென்
                                     வழங்கினாலென்,
கொந்துற்றகுழலிவளு முடித்தாலென் விரித்தாலென் குறித்த
                                           செய்கை,
யந்தத்தின்முடியும்வகை யடியேற்குத் தெரியுமோ வாதிமூர்த்தி.

     (இ -ள்.) ஆதிமூர்த்தி - (எல்லாப் பொருள்களுக்கும்) முதன்மையான
கடவுளே ! சிந்தித்தபடி - (இப்பொழுது தருமபுத்திரன்) ஆலோசித்தபடி, நீயும்
சென்றால் என் - நீ தூதுபோனாலு மென்ன? ஒழிந்தால் என் - அப்படிப்
போகாமலிருந்தாலு மென்ன? செறிந்த நூறு மைந்தர்க்குள் முதல்வன் -
நெருங்கின உறவாகவுள்ள நூறு குமாரர்களுள் முதல்வனாகிய துரியோதனன்,
நிலம் வழங்காமல் இருந்தால் என் - இராச்சியத்தை (எங்களுக்குக்)
கொடுக்காம லிருந்தா லென்ன?  வழங்கினால் என் - கொடுத்தால் என்ன?
இவளும் - இந்தத் திரௌபதியும், கொந்து உற்ற குழல் - பூங்கொத்துக்கள்
பொருந்தின கூந்தலை, முடித்தால் என் - எடுத்து முடித்து அலங்கரித்தால்
என்ன? விரித்தால் என் - (அங்ஙனம் முடிக்காமல்) விரித்தபடியே யிருந்தால்
என்ன? குறித்த செய்கை - (நீ) நினைத்த காரியம், அந்தத்தில் முடியும் வகை
- கடைசியில் முடியும் விதம், அடியேற்கு தெரியுமோ - அடியேனுக்குத்
தெரியுமோ? [தெரியாது என்றபடி]; (எ - று.)- எது எப்படி நடந்தாலும்
எல்லாம் உனது சங்கற்பத்தின்படியே முடியுமென்பது கருத்து.

     நீயும்என்ற உம்மை - உயர்வுசிறப்போடு எதிரது தழுவிய எச்சம்: கீழ்
உலூகன் தூது சென்றதை நோக்கி, இறந்தது தழுவிய எச்சமுமாம்.  'இவளும்'
என்ற உம்மை, இறந்தது தழுவிய எச்சத்தோடு இழிவுசிறப்பு.  கொந்துற்ற குழல்
என்பதற்கு - திருத்தமில்லாமல் சிக்குப்பட்டு அடர்ந்திருக்கிற
கூந்தலென்றுமாம்.  கொந்து - கொத்து என்பதன் மெலித்தல்.  நூறு மைந்தர் -
தொகைக்குறிப்பு, மைந்தர் - திருதராட்டிரனது புத்திரர்.  மைந்தர் -
வீரரென்றுமாம், செறிந்த - தம்மில் ஒருவரோடொருவர் ஒற்றுமைப்பட்ட
என்றுங் கொள்ளலாம்.  அடியேற்கு - உனது அடியவனாகிய எனக்கு.  ஓ -
எதிர்மறை.  'அந்தத்தில் முடியும்வகை அடியேற்குத் தெரியுமோ' என்றது
அவையடக்கமாகக் கூறியது; இங்ஙனங் கொள்ளாவிடின், அடுத்த கவியில்
"ஒருவருக்குந் தெரியாதிங் குன்மாயையானறிவேனுண்மையாக" என்றதனோடு
மாறுகொளக்கூறலாம்.  அந்தம், ஆதிமூர்த்தி - வடசொற்கள்.  மூர்த்தி -
அண்மைவிளி.                                               (91)

32.- இதுவும்  அது.

முருகவிழ்க்கும்பசுந்துளப முடியோனே யன்றலகை முலைப்
                                       பாலுண்டு,
மருதிடைச்சென்றுயர்சகடம் விழவுதைத்துப் பொது வர்மனை
                                  வளர்ந்தமாலே,
ஒருவருக்குந்தெரியாதிங் குன்மாயையானறிவே னுண்மையாகத்,
திருவுளத்துக்கருத்தெதுவோ வதுவெனக்குங் கருத்தென்றான்
                                  றெய்வமன்னான்.