யாசித்துப்பெற்று (அதனால் வருவதை)ப் புசித்து உயிரோடிருந்து வாழ்வதற்கே வழி சொல்லுகிறீர்கள்; உரையீர்- (இனி அவ்வவமானம் நீங்கும் விதத்தைச்) சொல்லுங்கள்; (எ - று.) இதுசாத்தகிவார்த்தையென்பது, மேல் 48-ஆங்கவியில் "சாத்தகிநின் றிவையுரைப்ப" என வருவதனால் விளங்கும். நண்பர் பக்கலிலும் யாதோரியைபுமில்லாத பிறர் பக்கலிலுமே ஏதாயினும் மொன்றை இரந்துவாழ்தல் மிக்க இளிவரவுக்கு இடமாயிருக்க, பகைவர் பக்கல் இரந்துவாழக் கருதுவது என்ன பேதைமை! என்றபடி. போரையே கருதாது சமாதானத்தையே கருதிக்கூறிய தருமன் சகதேவன் கண்ணன் இவர்களையும், தம் கருத்துச் சமாதானத்தின் மேலன்றிப் போரின்மேலாக வேறுபட்டிருப்பினும் இவர்கள் வார்த்தையைக் கடக்கமாட்டாத வீமன் முதலிய மூவரையும் பார்த்து, சுத்த வீரனான சாத்தகி, இவர்கட்கும் திரௌபதிக்கும் பகைவரால் நேர்ந்த அவமானங்களைக் கருதி மனம்பொறாது, தக்க சமயத்தில் நல்ல ஆலோசனையைச் சொல்லாதிருப்பது தகுதியன்றென்று பதைத்துக் கூறின னென்க. உரைக்கின்றீர் என்பதை - உரைக்கின்றவர்களே என விளியாகவுங் கொள்ளலாம்; கண்டிருந்தீர் என்பதைப் பெயராகக் கொண்டு, கண்டிருந்த நீவிரெல்லீரும் என்றலுமாம். தண்டிருந்தது, தனுவிருந்தது என்றவை - அவையிருந்தும் பயனற்றவையாயின என்பதோடு அவர்கள் பகைமுடிக்க வல்லவராயினும் தருமன் பொறுமைக்கு அஞ்சி அடங்கியிருந் தார்களென்பதையும் தெரிவித்தன. இரண்டாமடிக்கு - கூந்தல்மேற் பழிப்புள்ள தென்னும்படி அது விரிக்கப்பட்டிருந்த திரௌபதியை என்றும், திரௌபதி (மிக்க வீரர்களான கணவர்கள் பார்த்துச் சும்மா இருக்கத் தான் பகைவர்களைக் கற்புவலிமையால் அழிப்பது) தன்மேற்பழிப்புக்கிடமாமென்று கருதி அஞ்சி யிருந்தாளென்றும் உரைப்பாருமுளர். இனி, முதலிரண்டடிக்கு வீமன் கையிற் கதையிருந்தும் அருச்சுனன் கையில் வில் இருந்தும் புகழ் தாராது அவர்களிடம் பழிப்பிருத்தற்குக் காரணமாயிற்று என்னும்படி திரௌபதி துன்பமடைந்து இருந்தாளென்றலும் ஓருரையாம். மான அவமானங்களை நினையாது வயிறு வளர்த்தலே பெரியதென நினைக்கின்றீரென்பான், 'உண்டிருந்து வாழ்வதற்கே' என்றான். உரையீர் - அங்ஙனஞ் சொல்லாதீர் எனினுமாம்; இச்சொல் - உடன்பாடு எதிர்மறை இரண்டுக்கும் பொது. இவன்- அண்மைச்சுட்டு: அவன் - சேய்மைச்சுட்டு; சபையில் வீற்றிருக்கையில் சாத்தகிக்கு மிக அருகில் வீமனும், சிறிதுதூரத்தில் அருச்சுனனும் வீற்றிருந்ததனால், இங்ஙனம் சுட்டினது. பூங்குழல் - வேற்றுமைத்தொகையன்மொழி; இதனை அடையடுத்த சினையாகு பெயரெனக் கொள்ளினும் இழுக்காது. இப்பாட்டில் முன்னிரண்டடிகள்-படர்க்கையாகவும். பின்னிரண்டடிகள் முன்னிலையாகவுங் கூறப்பட்டது. அலட்சியத்தைக் காட்டிய இடவழுவமைதியின்பாற்படும். கருதலர் - நன்குமதித்து எண்ணுதலில்லாதவர்; காரணக்குறி. எல்லீர் - முன்னிலைப்பன்மைக் குறிப்பு வினையாலணை |