அக்குழந்தையைத் தந்தையிடங் கொடுத்துப் போயினள்; அங்ஙனம் வளர்ந்து அந்நாட்டில் கிரிவிரசமென்னும் நகரத்தில் அரசாண்டு பற்பல அரசர்களைப் போரிற் கொன்றுவென்று செருக்குக்கொண்டிருந்த அவன், அஸ்தி பிராஸ்தி என்னுந்தனது இரண்டு பெண்களைக் கண்ணனது மாமனான கம்சனுக்கு மணஞ் செய்வித்திருந்தான்: பின்பு அச்சராசந்தன் கண்ணன் கம்சனைக் கொன்றது காரணமாக வெகுகோபங்கொண்டு கிருஷ்ணனை வம்சத்தோடு கொல்ல வேண்டுமென்று அநேகம் பெருஞ்சேனையோடு எதிர்த்து வந்து மதுராபுரியை வளைத்துப் பெரும் போர் செய்து பலராமகிருஷ்ணர்களாலும் யாதவ சேனையாலுந் தானுந் தன் சேனையும் வெல்லப்பட்டு ஓடிப்போனான்; இங்ஙனம் பதினெட்டுமுறை மீண்டும் வருவது பொருவது தோற்பது ஓடுவதாய்ப் பங்கப்பட்டபின் கோபாவேசங்கொண்டு பலமான பெருஞ் சேனையைத் திரட்டிக்கொண்டு வந்தான்; இப்படியிருக்கையில், யவனதேசாதிபதியான காலயவனன், பலபராக்கிரமங்களாற் செருக்குக் கொண்டு, நாரத முனிவரால் கிருஷ்ண பலராமர்களையே தான் எதிர்த்தற்கு ஏற்ற பலவான்களாக அறிந்து, சேனையைச் சித்தஞ் செய்து கொண்டு போரின் பொருட்டு மதுரைக்கு வந்தான்; அத்தருணத்தில் கண்ணன், யாதவசேனைக்கு நாசமுண்டாகக் கூடுமென்று நினைத்து, சமுத்திரராசனைப் பன்னிரண்டு யோசனை தூரம் இடம் விடும்படி கேட்டு, அந்நடுக்கடலில், பகைவர் உட்புகவொண்ணாதபடி மிகவுங் காப்புடைத்தான துவாரகா நகரத்தை நிருமித்து, மதுரையிலிருந்த சனங்களை யெல்லாம் அந்நகரத்திற் கொண்டு சேர்த்து, காலயவனன் வருகையில், கண்ணன் தான் தனியே ஓராயுதமு மில்லாமல் மதுரையினின்று வெளியே புறப்பட்டு ஓடினன் என்பது வரலாறு. தான் அவதாரவிசேஷத்தில் அடைந்திருக்கும் மனிதத் தன்மையை அனுசரித்துக் காலத்துக்கு ஏற்ற கோலமாய்க் கண்ணன் இங்ஙனஞ் செய்தது, ஜராசந்தன் வீமனால் பின்பு மரணமடைய வேண்டிய ஊழ்வினையினுண்மையை நோக்கி யாயினும், இராசதருமத்தைப் பார்க்குமிடத்துப் பகைக்குப் பயந்து பங்கப்பட்டதாகவே முடிதலால், இவ்வாறு சாத்தகி கூறினது. சராசந்தனுக்கு இடியுவமை - அச்சந் தருதற்கும், தவறாது அழித்தற்கு மென்க. "மணிநீரு மண்ணு மலையு மணிநிழற், காடுமுடைய தரண்" என்ற நான்கு வகை யரண்களுள் முதலாகக் கூறப்பட்ட நீரரண்கடலால் நன்கு அமைந்திருக்கின்ற சிறப்புத் தோன்ற, 'துவரையரணாக' என்றார். மதுரா என்னும் வடசொல், ஆவீறு ஐயாயிற்று; மதுவென்னும் அரசனால் முதலில் சீர்திருத்தி யாளப்பட்டதனாலும் கண்ணனுக்கு இனிதா யிருத்தலாலும், மதுரை யென்று பெயர். பாண்டிய நாட்டிலுள்ள தென் மதுரையினின்று பிரித்தற்கு, 'வடமதுரை' எனப் பிறிதினியைபு நீக்கிய விசேஷணங் கொடுத்துக் கூறவேண்டிற்று. கைவிட்ட என்பதில், கை - விடுதல் வினையைச் சிறப்பித்து நின்ற தமிழுபசர்க்கம். மாதவன் என்னும் வடமொழித் திருநாமத்துக்கு - திருமகளது கொழுநனென்று பொருள்; ஆறாம்வேற்றுமைத்தொகை: மா - இலக்குமி, தவன் - கணவன். திகழ் என்ற வினைத்தொகை யடைமொழியையும் இங்கே |