பக்கம் எண் :

கிருட்டிணன் தூது சருக்கம் 141

இம்மதிலுக்குஒருவாறு உவமையாக அமைக்கப்பட்டதாமென்று சொல்லும்படி,
புரிசை - மதில், பரந்தது - பரவியுள்ளது; (எ - று.)

    முன்னிரண்டடிகளில் தொடர்புயர்வுநவிற்சியணியும், பின்னிரண்டடிகளில்
தற்குறிப்பேற்றவணியுமாக வேறுபாடுதோன்ற விரவிவந்த சேர்வையணி.
சக்கரவாளமலை - பூமியைச் சூழ்ந்த கடலைச் சுற்றிலும் கோட்டை மதில்போல
வளைந்திருப்பதொரு மலை; சக்கரம்போல வட்டமாக இருத்தலால்,
சக்கரவாளமென்று பெயர்.                                    (120)

61.-அந்நகரத்துக்கொடிச்சீலைகளின் வருணனை.

பகலினுங்கடும்பரிதிதன்கதிர்பரப்பாமல்
இகலியெங்கணுமெறிந்துகால்பொருதலினேத்திப்
புகலுகின்றமந்தாகினித்தரங்கமேபோல
அகல்விசும்பிடைமிடைவனநெடுங்கொடியாடை.

     (இ -ள்.) நெடு - நீண்ட, கொடி ஆடை - கொடிகளின் சீலைகள், -
கடும்பரிதி பகலினும் தன் கதிர் பரப்பாமல் - வெப்பத்தையுடைய சூரியன்
மத்தியான காலத்திலும் தனது கிரணங்களை வீசாதிருக்கும்படி, இகலி
எங்கணும் கால் எறிந்து பொருதலின் - (அவனோடு) பகைத்து எல்லா
விடங்களிலும் காற்று வீசி மோதுதலினால், - ஏத்தி புகலுகின்ற மந்தாகினி
தரங்கமே போல - (யாவராலும்) புகழ்ந்து கூறப்படுகின்ற தேவகங்கா நதியினது
அலைகள் போலவே, அகல் விசும்பிடை மிடைவன - இடம் பரந்த
ஆகாயத்தில் நெருங்குவன; (எ - று.)

    ஆகாயத்தில் மிக வுயரத்தில் நெருங்கி அசைந்து சூரிய கிரணங்களையும்
உட்புகவொண்ணாதபடி மறைத்து விளங்குகிற வெண்மையான கொடிச் சீலைகள்
வெண்ணிறமான ஆகாசகங்காநதியின் அசைகின்ற குளிர்ந்த அலைகளை
யொக்குமென்பதாம்:   உவமையணி.  காற்றிலே கொடிச் சீலைகள்
அசைவதைச் சூரியனிடத்துப் பகையாற் பகலினும் கதிர் பரப்பாமல்
மறைப்பதாகக் குறித்தது, தற்குறிப்பேற்றவணி.  விசும்பிடை மிடைவன நெடுங்
கொடியாடை - பிராசமென்னுஞ் சொல்லணி.  ஒவ்வொரு நிழலும்
அவ்வப்பொருளின் அடியில் தங்குதற்கு உரிய காலமான நடுப்பகலிலும் நிழல்
செய்யும்படி மிகப்பல கொடிகள் நெருங்கி நீண்டு உள்ளன வென்க.

    பகலினும், உம் - அப்போது நிழல் தருதலின் அருமையை
விளக்குதலால், உயர்வுசிறப்பு; இதனை எச்சவும்மையாக்குதல் சிறப்பின்றாம்.
ஆகாச கங்கைக்கு மந்தாகிநி யென்றுபெயர்.  கொடி யாடை - த்வஜபடம்.
"கங்கை யென்ற வாசகத்தாலே கடுவினை களைந்திடுகிற்கும்", "எழுமையுங்
கூடி யீண்டியபாவ மிறைப்பொழுதளவினி லெல்லாங், கழுவிடும்
பெருமைக்கங்கை" என்ற பெரியார் பாசுரங்களாலும், ஏத்திப்புகலப்படும்
மந்தாகினியின் மகிமையை அறிக. அணியணியாக வீசியடித்தலால்,
கொடிநிரைக்கு அலைவரிசை உவமையாம்.                       (121)