பக்கம் எண் :

கிருட்டிணன் தூது சருக்கம் 143

மற்றும்எல்லாப் பக்கங்களிலும் இடம்விட்டுப் புடைபெயர்தற்கு உரிய
இடத்தைப் பெறாமையால், துன்னி நின்றவர் ஏகுமின் ஏகுமின் என்னும்
ஓசையே - நெருங்கி நின்றவர்கள் 'போங்கள் போங்கள்' என்று
(பிறரைநோக்கிப்) பலகாற்சொல்லுகிற ஒலிகளே, உள்ளன - நிறைந்துள்ளன;
(எ- று.)

     மிக்கநெருக்கத்தால் மன்னவர்களின் நாற்படைகளும்
போக்கிடமில்லாமல் ஒன்றோடொன்று நிலைதடுமாறு மென்க.  "தோகையர்
குழாமுமைந்தர் சும்மையுந் துவன்றியெங்கும், ஏகுமினேகு மென்றிடையிடை
நிற்றலல்லாற், போகிலமீளகில்லா பொன்னகர் வீதியெல்லாம்" என்ற
கம்பராமாயணம் இங்கு ஒப்புநோக்கத்தக்கது.  மன்னர் வேழம் என்பதற்கு -
அரசர்கள் ஏறும் யானைகளென்று உரைத்து, சேனை - நால்வகைப்படை
யென்றுங் கொள்ளலாம்.  அடுக்குகள் - விரைவும், பன்மையுங் குறிக்கும்.
ஒரே அடியில், 'பின்னும் முன்னும்' என மாறுபட்ட சொற்கள் வந்தது -
தொடைமுரண்.                                            (123)

64.-இது - அந்நகரத்துக்கடைத்தெருவின் வருணனை.

வரையெலாம்பலவனமெலாங்கடலெலாம்வளைந்த
தரையெலாம்படுபொருளெலாந்தனித்தனிகுவித்த
நிரையெலாங்கவராவணநீர்மையைப்புலவோர்
உரையெலாந்தொடுத்துரைப்பினுமுவமைவேறுளதோ.

     (இ -ள்.) வரை எலாம் - எல்லாமலைகளிலும், பல வனம் எலாம் -
பலவகைப்பட்ட எல்லாக்காடுகளிலும், கடல் எலாம் - எல்லாக் கடல்களிலும்,
வளைந்த தரை எலாம் - (அக்கடல்) சூழ்ந்த எல்லாநாடுகளிலும், படு -
உண்டாகிற, பொருள் எலாம் - எல்லாப்பொருள்களையும், தனித்தனி குவித்த -
வெவ்வேறாகக் குவித்துவைத்துள்ள, நிரை எலாம் - வரிசைகளையெல்லாம்,
கவர் - (தன்னிடத்திலே) கொண்டுள்ள, ஆவணம் - கடைவீதியினது,
நீர்மையை - தன்மையை, புலவோர் - புலவர்கள், உரை எலாம் தொடுத்து
உரைப்பினும் - (தங்கள்) சொற்களையெல்லாம் புனைந்து வருணித்துச்
சொல்லத் தொடங்கினாலும், உவமை வேறு உளதோ - (அக்கடைத்தெருவிற்கு
எடுத்துச்சொல்லத்தக்க) உபமானப்பொருள் வேறு (உலகத்தில்) உள்ளதோ?
[இல்லையென்றபடி]; (எ - று.)

     எனவே,அதற்கு அதுவே உவமையா மென்றவாறு.  அதிசயோக்தி
முதலிய புனைந்துரைவகையாற் கற்பித்துக்கூறினாற் கூறலாமே யன்றி,
பொருளொப்புமை யெடுத்துச்சொல்லக்கிடையாதென்பதாம்.  மலைபடு
பொருள்கள் - மிளகு, கோட்டம், அகில், தக்கோலம், குங்குமம் முதலியன.
காடுபடு பொருள்கள் - இறால், தேன், அரக்கு, மயிற்பீலி, நாவி முதலியன.
கடல்படுபொருள்கள் - உப்பு, முத்து, பவளம், சங்கு, ஓர்க்கோலை முதலியன.
நாடுபடு பொருள்கள் - செந்நெல், சிறுபயறு, கரும்பு, வாழை, செவ்விளநீர்
முதலியன.  பல என்பதைப் பிறவற்றிற்குங் கூட்டலாம்.  இனி, பலவநம் என
வடசொற்றொடராக எடுத்து, பயன்களைத்தரும் வனமென்றுங் கொள்ளலாம்.
தரை - (பொருள்களைத்) தரிப்பது.  ஆவணம், உவமை - ஆப