ரணம், உபமாஎன்னும் வடசொற்களின் திரிபுகள். புலவர் - புலவோர் என ரகரவீற்றயல் அகரம் ஓவாயிற்று. (124) 65.-இது - அந்நகரத்துச்சதுரங்கசேனைகளின் தன்மை. விரவுகான்மலரினும்பலவீரரின்விதங்கள் பரவைவெண்மணலினும்பலபுரவியின்பந்தி இரவில்வானமீனினும்பலயானையினீட்டம் நிரைகொள்கார்த்துளியினும்பலதேரணிநிலையே. |
(இ - ள்.) (அந்நகரத்தில்), வீரரின் விதங்கள் - வீரர்களது பகுப்புக்கள், கான்விரவு மலரினும் பல - காட்டிற்பொருந்திய பூக்களின் தொகையினும் மிகப்பலவாம்: புரவியின் பந்தி - குதிரைகளின் வரிசைகள், பரவை வெள் மணலினும் பல-கடலின் வெள்ளிய மணல்களின் தொகையினும் மிகப்பலவாம்; யானையின் ஈட்டம்-யானைகளின் கூட்டங்கள், இரவில் வானம் மீனினும் பல - இராத்திரி காலத்தில் ஆகாயத்தில் (விளங்குகிற) நட்சத்திரங்களின் தொகையினும் மிகப்பலவாம்; தேர் அணி நிலையே - இரதங்களின் அழகிய வரிசைகள், நிரை கொள் கார் துளியினும் பல கூட்டத்தைக் கொண்ட மேகங்களின் மழைநீர்த்துளிகளினும் மிகப்பலவாம்; (எ- று.) எனவே, நால்வகைப்படையும் அங்கு வரம்பிகந்தன என்பதாம். ரதகஜதுரகபதாதி என்பவற்றை எதிர்நிரனிறைபடக் கூறினார். முதல்வாக்கியத்தில் வீரரின்விதங்கள் என்றதில், காலாள்வீரர் மாத்திரமே யன்றி, யானை தேர் குதிரைகளில் ஏறும் வீரரும் அடங்குவர். ஆகாயத்தில் மின்னுதல்பற்றி, நட்சத்திரங்களுக்கு வான மீனெனப்பெயர்; மின்னுதல் - விளங்குதல், பளபளத்தல், மின்னுவது, மீன்; வினைமுதற்பொருள்விகுதி புணர்ந்து கெட்டுப் பகுதி முதல் நீண்ட காரணப்பெயர். இனி, கரியதாய் அளவின்றிப் பரந்த வானமாகிய கடலிற்சஞ்சரிக்கும் மீன்கள்போல விளங்குவன என்ற காரணமுங் கூறலாம். (125) 66.- இது - அந்நகரத்துமாளிகைகளைப் பற்றியது. ஆசிலாமறையந்தணராலயமொருபான் மாசிலாமுடிமன்னவர்மாளிகையொருபாற் காசிலாமதியமைச்சர்தங்கடிமனையொருபாற் பேசிலாவளவணிகர்தம்பேரிடமொருபால். |
(இ - ள்.) (அந்நகரத்து இராசவீதியிலே), ஒரு பால் - ஒருபக்கத்தில், ஆசுஇலா மறை அந்தணர் ஆலயம் - குற்றமில்லாத வேதங்களையுணர்ந்த பிராமணர்களது கிருகங்களும்,- ஒரு பால் - ஒருபக்கத்தில், மாசு இலா முடிமன்னவர் மாளிகை - குற்றமில்லாத கிரீடத்தையுடைய அரசகுலத்தாரது கிருகங்களும்,- ஒரு பால் - ஒருபக்கத்தில், காசு இலா மதி அமைச்சர்தம் கடிமனை - குற்றமில்லாத அறிவையுடைய மந்திரிகளது சிறப்பையுடைய கிருகங்களும்,- ஒரு பால்-ஒருபக்கத்தில், பேசு இலா வளம் வணிகர் தம்பேர் இடம் - |